வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை கண்ணன் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல்
மதுரை: தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தமிழறிஞர் நெல்லை கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசினார் என்பது வழக்கு. இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று நெல்லை கண்ணன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தாம் நெல்லை வட்டார வழக்கில் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். ஆகையால் தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் நெல்லை கண்ணன்.
ஏற்கனவே நெல்லை கண்ணன் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக விசாரணைக் கைதியாக சிறையில் அடைப்பதா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications