நீதிபதியிடம் நாளை உண்மைகளைச் சொல்லவுள்ளார் நிர்மலா தேவி.. வக்கீல் பரபர தகவல்
Recommended Video
மதுரை: மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி நாளை நீதிபதி முன்பு ஆஜராகி உண்மைகளை சொல்லவுள்ளார் என்று அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் நிர்மலாதேவியை வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் சந்தித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் நிர்மலாதேவியை கடந்த சில நாட்களாக சந்திக்க சிறை நிர்வாகம் மறுத்தது. நாளை நிர்மலாதேவியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு மனிதாபமான அடிப்படையில் நீதித்துறை வழக்கில் கவனம் செலுத்துகிறது. நாளை ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. 2 தினங்களுக்கு முன்பாக நிர்மலாதேவி மகளிர் தினம் கொண்டாடினார் என சிறை நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நிர்மலாதேவி சிபிசிஐடி போலிசாரால் அதிக அளவு மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். நிர்மலாதேவி மன உளைச்சலில் உள்ளார். நிர்மலாதேவியை சந்தித்து பேசியபோது காவல்துறை உயர் அதிகாரிகள் அருகில் வந்து நிற்கின்றனர்.
நாளை நீதியரசரிடம் தைரியமாக உண்மையை சொல்ல வேண்டும் என நிர்மலாதேவியிடம் கூறியுள்ளேன். கடந்த 8மாதங்களாக வெளியில் நடக்கும் எந்த நிகழ்வுகளும், செய்தி தாள்களையும் சிறை நிர்வாகம் வழங்கவில்லை எனவும், நிர்மலாதேவி சிறையில் மகளிர் தினம் கொண்டாடினார் என்று சிறை நிர்வாகம் கூறியது பொய்யானது என்றார் அவர்.
கும்மியடிக்கும் போட்டி:
சிறைக்குள் நடந்த கும்மிப் போட்டியில் நிர்மலா தேவி பரிசு வாங்கினார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். தற்போதைய மன நிலையில் நிர்மலா தேவி கும்மி போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இயல்பாகவா இருக்கிறார் என்று மக்களுக்கும் சந்தேகம் வந்தது. இந்த நிலையில்தான் வக்கீல் பசும்பொன் பாண்டியன் அது பொய் என்று கூறியுள்ளார்.