திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது- அரசு மற்றும் தர்கா தரப்பு ஐகோர்ட்டில் உறுதி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.
மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர், திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவுக்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கடந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதிக்கவும், மலையில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், இந்த உரிமையை நிலை நாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தர்கா நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு இறுதியானது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் கடந்த 21 ஆம் தேதி கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழா தொடங்கியது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வரை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு சமைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கந்தூரி விழாவுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக தர்கா நிர்வாகத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதம் வைத்தது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.












Click it and Unblock the Notifications