பாருங்க.. ஆ.ராசாவுக்கு அமைச்சர்கள் சப்போர்ட் பண்ணவில்லை.. "கண்டுபிடித்த" அண்ணாமலை!
மதுரை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்து எந்த அமைச்சரும் இதுவரை பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர், பாஜக - திமுக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக கண்டனம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, தமிழக பாஜகவின் அனைத்து தலைவர்களும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி கைது
இந்த நிலையில் ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மாநில பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் போலி வழக்குகள் புனையப்பட்டு பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தாது. அதற்கு பதிலாக மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரின் நாடாளுமன்றத் தொகுதியில் 20 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அமைச்சர்கள் ஆதரவு இல்லை
ஏற்கனவே ஆ.ராசாவுக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல் ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை. சனாதன தர்மம் என்பது காலத்தால் அழியாத தர்மம். தன்னுடைய கடைசி காலத்தில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் கருணாநிதி. எங்கேயும் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் இருந்ததல்ல.

சர்ச்சைக்கு காரணம் என்ன?
தமிழக மக்களின் கோபத்தை திசைத் திருப்புவதற்காக சர்ச்சையை ஏற்படுத்துவதே நோக்கம். ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து பேசினால், பாஜக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆ.ராசா பேச்சால் சமுதாயத்தில் பிளவு ஏற்படாது. ஆனால் அதனை கண்டித்து பேசினால் பிளவு ஏற்படும் என்று கைது செய்யப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

திமுக சித்தாந்தம்
கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னார்கள். திராவிட நாடு கோரிக்கை வைத்தவர்கள், திராவிட நாடு வேண்டாம். ஆனாலும் திராவிட நாடு கோருவதற்கான அத்தனை கோரிக்கைகளும் அப்படி நீடிக்கிறது என்று சொன்னார்கள். இதன் மூலம் குழப்பமான சித்தாந்தத்திற்குள் திமுக கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications