"திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது" - மத்திய அமைச்சர் சபதம்!
மதுரை: "இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்கக் கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது." என மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான். எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ராஜ்யசபா எம்.பி தர்மர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதலின்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்கக் கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழில் இருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது." எனத் தெரிவித்தார்.
மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்தார். பூர்ணசந்திரனின் தந்தையும், சகோதரனும் அமைச்சரிடம், ''பூரணசந்திரன் விருப்பப்படி, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications