"தப்பில்லை!" ஜெயலலிதா மறைந்த நன்னாளில் என எடப்பாடி கூறியது இதனால்தான்! ராஜன் செல்லப்பா புது விளக்கம்
மதுரை: ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்த உறுதிமொழியை வாசித்த எடப்பாடி அம்மா மறைந்த நன்னாளில் என்று கூறியது சர்ச்சையானது. இதற்கிடையே எடப்பாடி அப்படிக் கூறியதில் தவறில்லை எனச் சொல்லி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வித்தியாசமான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
வரும் டிசம்பர் 9, 13, 14 ஆம் தேதி சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுக்க போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்து இருந்தது.
இது தொடர்பாக ஆலோசனை செய்ய மதுரையில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச்
ராஜன் செல்லப்பா
இதில் தமிழக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டம் தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, "தமிழகத்தில் மக்கள் விரோத அரசு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் போராட வேண்டிய நிலை உள்ளது.
போராட்டம்
ஆளும் திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி மதுரையில் வரும் நாட்களில் மிகப் பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளாளப்பட்டி பேரூராட்சி, வேலூர் நகராட்சியிலும், மதுரை மாநகர் பகுதி என வரிசையாகச் சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளோம். இந்தப் போராட்டங்களுக்கு மக்கள் மிகப் பெரியளவில் ஆதரவு அளிப்பார்கள். ஏனென்றால் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்" என்றார்.
ஓபிஎஸ்
ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராஜன் செல்லப்பா, "கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்துள்ளோம். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸுடம் தொண்டர்களும் இல்லை, கட்சி நிர்வாகிகளும் இல்லை.. கட்சியும் கூட அவர் பக்கம் இல்லை. இதையெல்லாம் உணர்ந்ததால் தான் மூத்த வழக்கறிஞர் யாரும் இவருக்காக வாதாடத் தயாராக இல்லை.. இதனால் தான் வழக்கைத் தள்ளிப்போட அனைத்து முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார். தோல்வி அடைவோம் எனத் தெரிந்தும் எந்த வழக்கறிஞரும் வழக்கை வாதாட மாட்டார்கள்.. இதனால் தான் இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஓபிஎஸ் செல்லப்பட்டுள்ளார்" என்றார்.
ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழி
ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்த உறுதிமொழியை வாசித்த எடப்பாடி அம்மா மறைந்த நன்னாளில் என்று கூறியது சர்ச்சையானது. இது தொடர்பாகக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "மற்ற தலைவர்கள் போல எடப்பாடி பழனிசாமி இல்லை. மற்ற தலைவர்கள் அனைவரும் எழுதி வைப்பதை அப்படியே பார்த்துப் படித்துவிடுவார்கள். இப்படி எழுதியதை அப்படியே பார்த்துப் படிக்கும் பழக்கம் எடப்பாடிக்கு இல்லை. எப்போதும் மனதில் பட்டதை அப்படியே கூறிவிடுவார். உறுதிமொழி பத்திரத்தில் சில பிழை இருந்ததால்.. அந்த மாறுதலான வார்த்தைகள் வந்துள்ளது.
தவறு இ்லலை
அவர் கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம்... ஐந்தாம் தேதி சிவனுக்கு உகந்த நாள் பிரதோஷம் என்பதால் நன்னாள் எனக் கூறி இருக்கலாம், அல்லது அதிமுகவிற்கு சரியான தலைவர் எடப்பாடி பழனிசாமி என தேர்ந்தெடுத்து டெல்லிக்குக் கூப்பிட்ட நன்னாள் எனவும் குறிப்பிடலாம்.. எடப்பாடி தவறான நோக்கத்தில் அதனைப் படிக்கவில்லை. இதனை விட மிக தவறான வார்த்தைகள் எல்லாம் இன்றைய முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.இதையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.
கண்காட்சி தான் ஓபிஎஸ் நடத்துவார்
விரைவில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு பொதுக்குழுவைக் கூட்ட உள்ளதாகத் தகவல் வெளியானது. அந்த பொதுக்குழுவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் கூறியது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த ராஜன் செல்லப்பா, "ஓபிஎஸ் கூட்டப் போவது கண்காட்சியாக இருக்குமே தவிரப் பொதுக்குழுக் கூட்டம் இல்லை. அவரிடம் இருந்த ஒரே ஒரு பேச்சாளரும் திமுகவிடம் போய்விட்டார்... இதுவே ஓபிஎஸ் அணிக்கும் திமுகவினருக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படையாகவே காட்டுகிறது.
ஆட்சேபனை இல்லை
டிடிவி தினகரன் போல ஓபிஎஸ் கூட தனியாகக் கட்சி தொடங்கித் தேர்தலில் போட்டியிடலாம். இதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை. எங்களிடம் தான் கட்சியும் இன்னமும் உள்ளது." என்றார். தொடர்ந்து மதுரை மாநகராட்சி 95வது வார்டு (திமுக) மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவைச் சந்தித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தார். இதனை ராஜன் செல்லப்பா அடுத்த சட்டமன்றத் தொகுதி நிதியில் சீரமைக்க உறுதியளித்தார்.