காணாமல் போன கூட்டாளி கொடூர கொலை.. ரவுடி வரிச்சியூர் செல்வம் சிக்கியது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்!
மதுரை: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கூட்டாளி கொலை தொடர்பாக வரிச்சியூர் செல்வம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர். மதுரை கருப்பாயூரணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 4வது குற்றவாளியான செந்திலை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேசமயம், செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டதால், தனது கணவர் செந்திலை கண்டுபிடித்துத் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து மதுரை ஐஜி அஸ்ரா கார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த மனு தொடர்பாக அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண்காரட் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில், தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகக் கூறி வரும் பிரபல ரவுடியான மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. செந்திலின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை போலீசார் ஆராய்ந்தனர்.
செந்திலின் கடைசி அழைப்புகளை கண்டறிந்தனர். அவர் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை தொடர்பு கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடித்தனர்.
வரிச்சியூர் செல்வத்தை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பாயூரணி கொலை வழக்கில், செந்தில் தனக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரை சுட்டுக்கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசியதாக போலீசாரிடம் வரிச்சியூர் செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் மீது ஆள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications