மாடுகளுக்கு முன் எழுச்சியுரை.. நரம்பு புடைக்க பேசிய சீமான்! ஒரு வாய் தண்ணீர் குடிக்க முடியல என வேதனை
மதுரை: மலைகள் மொட்டையடிக்கப்பட்டு கனிமவளக் கொள்ளை நடைபெறுவதால் மாடுகள், ஆடுகள் மேய்ச்சல் நிலங்களை இழந்து வருவதாகவும், மணல் கொள்ளையால் நீர்வளம் குறைந்து ஆடு, மாடுகள் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவித்து வருவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மேய்ச்சல் எங்கள் உரிமை என்ற மாநாட்டில் ஆடு, மாடுகள் முன் பேசிய சீமான், ஆடு, மாடு இல்லை என்றால் எப்படி இறைச்சி, பால் கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என் முழக்கத்தை முன்வைத்து ஆடு மாடுகள் மாநாடு, மதுரை அருகே உள்ள விராதனூர் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது.
கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும்ம் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை அமைத்து மேடையிலிருந்து மாடுகளுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகள் வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும். என்பதை, வலியுறுத்தும் வகையிகல் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்காக கடந்த 10 நாட்களாக முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு இன கிடை மாடுகள் இதில் பங்கேற்றன. தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆடு மாடுகளுக்கு என்று தனியே ஒரு மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த மாநாட்டு ஏற்பாட்டு பணிகளின் போது பலமுறை சீமான் நேரடியாக வருகை தந்து மாநாட்டுத் திடலை ஆய்வு செய்தார். குறிப்பாக ஸ்பீக்கர் சத்தத்தில் ஆடு மாடுகள் மிரளுகின்றனவா என தானே பேசி அதனை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று மாநாடு விரகனூரில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய நாம் தமிழர் சீமான்," தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஆடு, மாடுகள். மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கி கோவை வரையிலான மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மக்கள் வளர்த்து வந்தனர். ஆனால் இன்று கனிம வள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டு இன மாடுகள் அழிந்துவிட்டன. காவிரி, வைகை போன்ற பெரும் ஆறுகளில் மணல் கொள்ளையால் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு எங்களுக்கு ஒரு வாய் குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை.
உழவுக்கு என்று டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டது. டிராக்டர்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாடுகள் கொன்று குவிக்கப்பட்டன. ட்ராக்டர் நிலத்தை தான் கீறும். ஆனால் மாடுகள் நிலத்தை உழும் போது அதன் சாணமும் கோமியமும் நிலத்துக்கு உரமாக மாறின. மேய்ச்சல் நிலத்துக்கு செல்லும்போது விவசாய நிலங்களை மாடுகளை பட்டி போட்டு அடைப்பதால் அதன் கழிவுகள் நிலத்துக்கு உரம் ஆகின. ஆனால் திட்டமிட்டு நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நவீன விவசாயம் கொண்டுவரப்பட்டது.
ஆயிரக்கணக்கான மாடுகள் கொன்று குவிக்கப்பட்டன. அதனால்தான் இன்று உலக நாடுகள் பால் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. மாடுகளை அழித்து விட்டால் இறைச்சிக்கும் பாலுக்கும் எங்கே போவது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கி தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் அருகி வருகிறது. இது தொடர்பாக கேள்வி கேட்டால் நம்மை விமர்சிக்கிறார்கள்.
ஆடு மாடு மேய்ப்பது என்ன கேவலமா? ஆடு மாடு மேய்ப்பது கேவலம் என்றால் இறைச்சி பால் எப்படி கிடைக்கும். ஆடு வளர்ப்பதும் மாடு வளர்ப்பதும் அரசு வேலை ஆக்கப்படும் என நாம் தமிழர் சொன்னபோது விமர்சித்தார்கள். ஆனால் இந்த மாநாட்டை பார்த்து அவர்கள் வாய் அடைத்து போய் இருக்கிறார்கள். வாயில்லா ஜீவன்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் நாம் தமிழர் தான். வெளிநாடுகள் எல்லாம் நவீன முறையில் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகிறது. ஹெலிகாப்டர்களை வைத்து மாடுகளை மேய்க்கிறார்கள். ஆனால் இங்கு மேய்ச்சல் குறித்தும் ஆடு மாடுகள் குறித்தும் பேசினால் நாம் தமிழர் கட்சியினை விமர்சிக்கிறார்கள். ஒரு நாள் நாம் சொன்னதன் அருமை இவர்களுக்கு புரியும். வாயில்லா ஜீவன்களுக்கு குரல் கொடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications