எடப்பாடி பழனிசாமி டீமுக்கு ஸ்டாலினோடு நெருக்கம்.. சும்மாவா நடக்குது இது- வெடி வீசிய ஓபிஎஸ் ஆதரவாளர்!
மதுரை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவுடனும், முதல்வர் ஸ்டாலின் உடனும் நெருக்கம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஸ்டாலினுடன் டீலிங் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்குக் காரணம், ஈபிஎஸ் டீமுக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் 'ரகசிய டீலிங்'இருப்பதால் தான் என ஒரே போடாகப் போட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன்.
ஈபிஎஸ்ஸுக்கு எதிராக தங்கள் பலத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஓபிஎஸ் தரப்பு இன்று மதுரையில் ஏராளமான தொண்டர்களுடன் பேரணியை நடத்தியது.
இதுவெறும் ஆரம்பம் தான்.. இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்.. பின்னணி என்ன?
மாற்றி மாற்றி நியமனம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் இரு தரப்பில் இருந்தும் எதிர் தரப்புக்கு செக் வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கிய ஈபிஎஸ், புதிதாக நிர்வாகிகளை நியமித்தார். அதேபோல, ஓ.பன்னீர்செல்வம், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், ஈபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.
மதுரை மா.செக்கள்
அந்தவகையில், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்டார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக ராமமூர்த்தி, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முருகேசன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒபிஎஸ் அணியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் பேரணியாகச் சென்று முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரணிக்கு பின்னணி
அதிமுக பொதுக்குழு, அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் என நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பும் தற்போது வேகம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய நிலையில், தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் பலத்தை நிரூபிக்குமாறு ஓபிஎஸ் ஆர்டர் போட்ட நிலையில் தான் இன்று மதுரையில் இந்தப் பேரணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் டீம், திடீரென ஆக்ஷனில் இறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலகிருஷ்ணன்
இந்தப் பேரணியைத் தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் அணியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான கோபாலகிருஷ்ணன், "ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக தொண்டர் படை எழுச்சியோடு தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது. அதிமுகவை ஓபிஎஸ் வழிநடத்துவதற்கான காலம் கனிந்துள்ளது. நீதிமன்றமும் கனிந்துள்ளது. அதிமுகவை வழிநடத்த சரியான தலைவர் ஓபிஎஸ் மட்டுமே. 2026 சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் எனும் நான் என்ற குரல் ஒலிக்க உள்ளது எனத் தெரிவித்தார்.
ஈபிஎஸ் டீம் ஸ்டாலினோடு நெருக்கம்
ஓபிஎஸ் அதிமுகவிற்கு தலைமையேற்க சபதம் ஏற்று அவர் பின்னால் அணிவகுப்போம். அதிமுகவை பிடித்த சதிகாரர்கள் தானாக கெட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் ஸ்டாலினோடு நெருக்கம் காட்டிக்கொண்டு ஓபிஎஸ் மீது பழி சுமத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஸ்டாலினோடு டீலிங் உள்ளதால் தான் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்
ஓபிஎஸ் துரோகி எனக் குற்றம்சாட்டும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக ஆட்சியைப் பாராட்டியதைக் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து வந்தனர். திமுக அரசு ஓபிஎஸ்ஸுக்கு துணையாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கான பதிலடியாக, இந்த குற்றச்சாட்டை ஓபிஎஸ் தரப்பு கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதில் நடவடிக்கை எடுக்காததற்கு, ஈபிஎஸ் - ஸ்டாலின் நெருக்கம் தான் காரணம் என பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.