'கிளாமர்'.. மனைவியை பார்த்ததுமே முகம் மாறிய கணவர்.. அட அதிசயம்.. சங்கிலியை நொறுக்கிய சபாஷ் பெண்
அப்போதுதான் அவரது மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ஏன் நம்மால் உடல் எடையை குறைக்க முடியாது.. ஒரு ஆணின் துணை இல்லாமல் குடும்பத்தை நடத்துவது என்ன முடியாத காரியமா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
மதுரை: உடல் பருமனாக இருந்ததால் கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், வைராக்கியத்தை மட்டுமே துணையாக கொண்டு இன்று பாடி பில்டராக மாறி சாதனை படைத்திருக்கிறார்.
கணவர் இல்லாததால் பொருளாதார நெருக்கடி ஒருபுறம், பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கடமை மறுபுறம் என மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சாதனையை அவர் செய்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.
எந்த உடலை பார்த்து அனைவரும் கேலி செய்தார்களோ.. அதே உடலை தனது வியர்வையால் செதுக்கி அதன் மூலமாகவே தற்போது கைநிறைய சம்பாதித்து வருகிறார் நமது மதுரை மண்ணின் மகள். தங்களை யாராவது கிண்டல் செய்துவிட்டாலே வீட்டில் முடங்கிவிடும் பலருக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறார் இவர்.

திடீர் உடல்பருமன்
மதுரையில் உள்ள ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா அன்னமேரி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வெரோனிகாவால் 12-ம் வகுப்பிற்கு மேல் உயர்கல்வியை தொடர முடியவில்லை. பின்னர் அவரது பெற்றோர் வெரோனிகாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் வெரோனிகா. அதுவரை சற்று ஒல்லியாகவே இருந்த வெரோனிகா, குழந்தை பிறந்தது முதலாக திடீரென குண்டாக தொடங்கினார். சரி.. குழந்தை பெற்றால் சில பெண்களுக்கு எடை கூடுவதை போல நமக்கும் கூடுகிறது என அவர் நினைத்துள்ளார். ஆனால், அவரது எடை மாதந்தோறும் கூடி வந்தது.

கைவிட்ட கணவன்
இந்த சூழலில், அடுத்ததாகவும் வெரோனிகா கர்ப்பமாகி இரண்டாவது குழந்தையை பெற்றார். அவ்வளவுதான். வெரோனிகாவின் உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது. 108 கிலோ வரை அவரது எடை கூடியது. உடல் பருமனான வெரோனிகாவை அவரது கணவரே வெறுக்க தொடங்கினார். உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை.. என வார்த்தைகளால் அவரை காயப்படுத்தினார். இவ்வாறு கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு, ஒருகட்டத்தில் வெரோனிகாவை கைவிட்டுச் சென்றார் அவரது கணவன். கணவர் விட்டுச்சென்றதால் நிர்கதியான வெரோனிகா, தனது மகன், மகளுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார்.

சூனியமான வாழ்க்கை
கணவர் இல்லாததால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எந்தவித பண உதவியும் இல்லாமல் எப்படி குடும்பத்தை ஓட்டுவது, பிள்ளைகளை எவ்வாறு படிக்க வைப்பது என விழிப்பிதுங்கி நின்றார் வெரோனிகா. இது ஒருபுறம் இருக்க, உடல் பருமனால் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் வந்தன. அதிக எடையால் மூட்டு வலியும், கழுத்து வலியும் அவரை தினம் தினம் பிய்த்து தின்றன. இந்த உலகத்தில் தனக்கென யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்டதாக வெரோனிகா உணர்ந்தார்.

பிறந்தது வைராக்கியம்
அப்போதுதான் அவரது மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ஏன் நம்மால் உடல் எடையை குறைக்க முடியாது.. ஒரு ஆணின் துணை இல்லாமல் குடும்பத்தை நடத்துவது என்ன முடியாத காரியமா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அடுத்த நாளே உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கினார் வெரோனிகா. முதலில் மெதுவான நடைப்பயிற்சி, பின்னர் மெதுவான ஓட்டம் என தனது உடற்பயிற்சியை விரிவுப்படுத்தினார். இரண்டே வாரத்தில் அவருக்கு உடலில் நல்ல முன்னேற்றங்கள் தென்பட்டன. உடற்பயிற்சியால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து கழுத்து வலி, மூட்டு வலி ஆகியவை மெல்ல குறைவதை உணர்ந்தார் வெரோனிகா. மாதங்கள் உருண்டோடின. வெரோனிகாவின் உடல் எடை 7 கிலோ வரை குறைந்திருந்தது.

அடிபட்ட புலி
அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த ஜிம்மில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 38 வயது. தினமும் காலையில் இரண்டரை மணிநேரம், மாலையில் இரண்டரை மணிநேரம் என 5 மணிநேரம் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில், அவரது உருவத்தை கண்டு ஜிம்மில் உள்ளவர்கள் கிண்டல் அடித்துள்ளனர். ஆனால் அதையெல்லாமல் பொருட்படுத்தாமல், தனது காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தினார் வெரோனிகா. ஓராண்டில் அவரது உடல் எடையில் 30 கிலோ குறைந்தது. இன்னும் அவருக்கு வேட்கை தணியவில்லை. அடிபட்ட புலி போல மேலும் வெறித்தனமாக, கடினமான உடற்பயிற்சிகளில் இறங்கினார்.

பாடி பில்டர்
இவ்வாறு 4 ஆண்டுகள் அயராத முயற்சியால் 65 கிலோவாக ஃபிட்டாக மாறினார் வெரோனிகா. இந்நிலையில், அண்மையில் ஆசிய அளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று 6-வது பரிசை வெரோனிகா தட்டிச் சென்றார். தற்போது தான் உடற்பயிற்சி செய்த ஜிம் உட்பட பல ஜிம்களில் பயிற்சியாளராக வேலை செய்து கைநிறைய சம்பாதித்து வருகிறார். முயற்சியும், சோர்வடையாத மனமும் இருந்தால் இந்த உலகில் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் மதுரை பெண் வெரோனிகா.












Click it and Unblock the Notifications