கூடையில கருவாடு..மல்லிப்பூ மணக்கும் மதுரை ரயில் நிலையத்தில் ஜோராக விற்கும் கருவாடு
இந்தியாவில் முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டுக் கடை அமைத்து மகளிர் சுய உதவிக்குழுவினர் அசத்தி வருகின்றனர்.
மதுரை: ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு கடை விற்பனையை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டுக் கடை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தின் கீழ் மதுரை,நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்கள் விற்பனை திட்டம் அளிக்கப்பட்டிருந்தது இந்த திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 30 ரயில்வே நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்களை விற்பதற்கு விருப்பம் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் எந்த கட்டணமும் செலுத்தாமல் 15 நாட்கள் அந்தந்த ஊர்களின் பிரதான பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம் இதன் மூலம் பயணிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் அப்பகுதியில் பிரபலமான பொருட்களை எளிதில் வாங்கிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
"ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்" என்ற பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் மதுரைக்கே உரித்ததான சுங்குடி சேலை விற்பனை கூடம் ஏற்கனவே இயங்கிவருகிறது. தற்போது இந்திய ரயில்வேகளில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட் என்னும் கருவாட்டு விற்பனை கூடம் இன்று துவங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மகளிர் சுய உதவிகுழுவினர் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றன. பனை பொருட்கள், கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அந்த பொருட்களின் விலை குறைவாகவும், தரமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் மகளிர் சுய உதவி குழுவின் அடுத்த கட்ட முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் பாலித்தீன் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கருவாடு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பயணிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு கடை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கருவாடுகள் பேக் செய்யப்பட்டு இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் முதல் கருவாட்டு விற்பனை கூடத்தை ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தமிழ் நாட்டின் தலைவர் சிவராஜா ராமநாதன் துவக்கி வைத்தார். மல்லிகைப்பூ மணக்கும் மதுரையில் பூக்கள் விற்பனை செய்யும் கடை அருகே கருவாடு கடையும் விற்பனைக்கு துவங்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் அதிநவீன விற்பனை கூடங்கள் இருப்பது போன்று ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் அவர்கள் எளிதில் பொருட்களை வாங்கிச் செல்லும்வகையில் 100 ரூபாயில் இருந்து கருவாடுகள் பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications