ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்!
மதுரை: ஆன்லைன் ரம்மி மூலம் இளைஞர்களின் பணம் பறிபோகிறது என்றும் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டுக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, லாட்டரி சீட்டு முறைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பணத்தை மையமாக கொண்டு ரம்மி உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி இவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
இளைஞர்கள் நேரத்தையும் சிந்திக்கும் திறனையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு சீரழிக்கிறது என்றும், படித்த பட்டதாரி இளைஞர்களின் பணமும் இந்த விளையாட்டில் பறிபோவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications