ஒரு உறையில் ஒரு கத்தி.. அதிமுகவுக்கு எடப்பாடி! எவனுக்கும் இடம் கிடையாது! திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
மதுரை: அதிமுகவைப் பொறுத்தவரை ஒரு உறையில் ஒரு கத்தி தான் எனவும், எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர், முதலமைச்சர் வேட்பாளர் என உறுதியாக கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல வேறு யாருக்குமே அதிமுகவில் இடம் கிடையாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பேச்சாளர்களை தேர்வு செய்ய முகாம் நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் 27 பேர் சென்னை பயிற்சி முகாமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வு முகாமில் அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
திண்டுக்கல் சீனிவாசன்:
தொடர்ந்து நிகழ்ச்சியில் இளம் பேச்சாளர்களிடையே பேசிய அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன்,' எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதிலிருந்தே அதிமுகவில் பயணித்து வருகிறோம். எம்ஜிஆர் சொல்வதைத் தான் நாங்கள் கேட்போம். எம்ஜிஆருக்கு பாதுகாப்பு அரணாக இருந்த நாங்கள் அதற்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசத்திற்குரிய நபர்களாக இருந்தோம். தற்போது அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:
அவர்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார். அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல அதிமுகவில் யாருமே இனி நுழைய முடியாது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இரட்டை தலைமை இருந்த போது ஒற்றை தலைமை வேண்டும், ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என நாங்கள் பேசி இருந்தோம். அந்த அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ பன்னீர்செல்வம்:
அதற்குப் பிறகு அதிமுகவை வளரவே விடமாட்டோம் என பலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள், ஆனால் அவர்களின் திட்டமெல்லாம் தவிடு பொடியாகும். தயவு செய்து யாரும் குரூப் சேராதீங்க. பணம் ஜாதி என அதிமுகவில் எதுவுமே கிடையாது. உண்மையாக உழைத்தவர்களுக்கு நிச்சயம் உயர்வான பதவி கிடைக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக என்னை போன்றவர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் தற்போது அதிமுகவின் பொருளாளராகவும், எம்பியாகவும், எம்எல்ஏ, ஆகவும் அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன்.
ஒற்றை தலைமை:
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். நாங்கள் மீண்டும் அதிமுகவுக்கு வருவோம் பதவி தருவோம் என எவன் சொன்னாலும் நம்பாதீர்கள். எவனாவது கதை விட்டால் அவர்களை நம்பாதீர்கள். தகுதி இல்லாதவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. பணத்தை செலவிட்டு பதவி கிடைக்கலாம் என்பது அதிமுகவில் இல்லை.
அதிமுக இளைஞர் பேச்சாளர் முகாம்:
அதிமுகவின் இளம் பேச்சாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் இருந்து மக்களுடைய அதிமுகவில் நலத் திட்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும். திமுகவில் நடக்கும் அநியாயங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்து நமக்கும் நல்லது நடக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications