ஏணி சின்னத்தில் ஒரு குத்து.. ஓபிஎஸ் - எடப்பாடி 2 பேரும் பாஜக கூட்டணிதான்.. நயினார் ஒரே போடு
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியோடு தான் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏணி சின்னத்தில் ஒரு குத்து, தென்னை மரம் சின்னத்தில் ஒரு குத்து என 2 பேருக்கு ஓட்டு போட்ட வடிவேலு காமெடி காட்சியை நினைவூட்டியது நயினார் பேச்சு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேறு விஷயமாக சென்னை வந்ததால், ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை என்று கூறிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினால் காவல்துறையை முழுமையாக கையாள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவிகிதம் கிடைத்தது. தென் மாவட்டங்களிலும் அதிமுகவின் சரிவுக்கு இந்த கூட்டணியும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலை குறித்து சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இடையில் மோதல் இருக்கிறது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அமமுக, ஓபிஎஸ் ஆகியோருக்கு இடமிருக்குமா, ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுமா என்றும் கேள்வி எழுந்தது. இதனிடையே சென்னை வந்த அமித் ஷா தங்களை சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் கூறி இருந்தார். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த நயினார் நாகேந்திரன் வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மகாலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. அதனை அகற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறார். அதன் காரணமாகவே அமித் ஷா வருகையின் போது ஓபிஎஸ்-ஐ அழைக்கவில்லை. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்ததற்கான காரணமே வேறு. ஓபிஎஸ் எங்களுடன் கூட்டணியில் இருப்பதால், அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே எங்காளுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கமே காரணம். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications