மீண்டும் திமுகவுடன் நெருக்கம்.. ராமநாதபுரத்தில் நெகிழ்ந்துபோன ஓபிஎஸ்.. பின்னணியில் உள்ள கணக்கு!
மதுரை: மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று மக்கள் பேசிக் கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதற்கு பின்னணியில் ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு சம்பவம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது என்ன சம்பவம், அந்த சம்பவத்தில் கலந்து கொண்டதற்கு பின் ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விலகிய நிலையில், அவரின் அடுத்த திட்டம் குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், அடுத்தக் கட்டமாக சுற்றுப்பயணத்தை கூட தொடங்காமல் அமைதி காத்து வருகிறார்.

பாஜக கூட்டணி, அதிமுக, திமுக மற்றும் தவெக உள்ளிட்ட எந்த தரப்பும் ஓபிஎஸ்க்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேவர் ஜெயந்தி விழா நெருங்கி இருப்பதால், ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
தேவர் சிலைக்கு தீபாராதனை நடத்தப்பட்டு புனிதநீர் மக்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஓபிஎஸ்க்கு திமுக தரப்பில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முழுக்கவே திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா ஓபிஎஸ் உடன் நெருக்கமாக இருந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுகவினரின் வரவேற்பால் ஓபிஎஸ் நெகிழ்ந்து போனார் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்-ஐ பார்க்க ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் பேசுகையில், மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
எதிர்க் கட்சிகள் பிரிந்து கிடப்பது திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஷாக்காக இருந்தாலும், ஓபிஎஸ் மனதில் வேறு கணக்கு இருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே மக்களவை தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ், 2வது இடத்தை பிடித்தார்.
தற்போதும் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவு இருப்பதால், மீண்டும் சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் மீண்டும் போட்டியிட முடிவு எடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை சுயேட்சையாக அல்லாமல், முக்கியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications