மேகதாது அணையா? டி.கே. சிவகுமார் சொல்லிட்டா போதுமா? தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது! ஓபிஎஸ்
மதுரை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்தது. இதை தமிழகத்தில் உள்ள கட்சிகள் கண்டித்தன. மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திரும்ப பெற திமுக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். சிவக்குமாருக்கு நீர்ப் பாசனத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நீர்ப் பாசனத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மேகதாது அணை மற்றும் மகதாயி நதிநீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில் கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம் என்றார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசின் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளில் சில குறைபாடுகள் இருப்பதால் அங்கீகாரமானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைபாடுகள் நீக்கிய பிறகு அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும் என்றார். அப்போது அவரிடம் செங்கோல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications