அவசரப்படாதீங்க.. நாளை காலை முக்கிய அறிவிப்பு வெளியாகும்.. மதுரையில் ஓபிஎஸ் கொடுத்த அப்டேட்!
மதுரை: நாளை காலை கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், பாஜகவும் கைவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது, அவரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்தால், அது பெரும் பாக்கியமாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு மோடியை சந்திக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.

மாறாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், ஏசி சண்முகம் உள்ளிட்ட பலருக்கும் திருச்சி விமான நிலையத்தில் மோடியை சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் மூலமாக பாஜக தனது முக்கியத்துவம் அதிமுக மட்டும் என்று மறைமுகமாக கூறிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும், ஓபிஎஸை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் காலில் கூட விழுகிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிய போதும், அவர் இறங்கி வரவில்லை. இதனிடையே கடந்த 3 நாட்களாக பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜகவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவை கண்டித்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இதனால் ஓபிஎஸ்-ன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மதுரையில் செப்.4ல் மாநாடு நடக்கும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் தவெக தலைவர் விஜயை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு முக்குலத்தோர் ஆதரவு இருந்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் எதிர்ப்பை பாஜகவை வைத்து சமன் செய்யலாம் என்று அதிமுக கணக்கு போட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைத்தால், அது அதிமுக - பாஜக வெற்றியைக் கணிசமாகப் பாதிக்கும்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை காலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications