ரத்தத்தால் அழைப்பு விடுத்த ரத்தத்தின் ரத்தங்கள்! தேவர் ஜெயந்தி.. எடப்பாடிக்கு இப்படி ஒரு அழைப்பா?
மதுரை: வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் அவருக்கு மரியாதை செலுத்த பழனிச்சாமி மதுரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி
தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார். இதேபோல தமிழக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி வருகை
விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம். அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, அதிகாரிகள், மாவட்ட காவல் துறையினர், அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குருபூஜை நிகழ்ச்சி
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருகை தர இருக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதிமுகவினர் அழைப்பு
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அவருடைய கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் தங்களது பெயருடன் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரத்தத்தின் ரத்தம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவினர் ரத்தத்தின் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாக கூறி வருகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications