மதுரை மக்களை நள்ளிரவில் அலற விட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்.. சிக்கிய 4 சிறுவர்கள்!
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் தூங்காமல் வீதிகளில் திரண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார், 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அந்தச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையின் முக்கிய பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசி அலறவிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரத்தில் நள்ளிரவில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுவீசி மக்களை அச்சுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மதுரையையே கதிகலங்க விட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வழக்கம்போல பொதுமக்கள் இரவு நேரத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து எழுந்தனர். என்ன நடந்தது? என்று தெரியாமல் வெளியே வந்து பார்த்தபோது மகாலட்சுமி கோயில் தெரு வழியாக 4 மர்ம இளைஞர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது மறைந்ததைப் பார்த்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. அது தொடர்பாக போலீசில் புகார் அளித்து பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என கண்டுபிடிப்பதற்குள் அதே கும்பல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி முதல் தெருவிலும் பெட்ரோல் குண்டுவீசி அலறவிட்டுள்ளனர். அங்கும் அவர்கள் யார் கண்ணிலும் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு முழுக்க உறங்காமல் அச்சத்தில் வீதியில் கூடியிருந்தனர்.
கடந்த சில மாதங்களாக மதுரையின் சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இதுபோன்ற கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும் பல்வேறு குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிசிடிவி கேமிராவில் மர்ம இளைஞர்களின் முகம் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார், 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அந்தச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்கள், மது போதையில் பெட்ரோல் குண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவம் மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications