‛மதுரை ஆதீனத்தை தடுத்த பாதுகாவலர்’.. பார்த்ததுமே காரை நிறுத்தி மோடி தந்த சிக்னல்! மாறிப்போன நிலைமை
மதுரை: மதுரையில் பிரதமர் மோடி காரில் அமர்ந்து ஊர்வலமாக சென்றார். அப்போது ரோட்டோரம் நின்ற மதுரை ஆதீனத்தை பார்த்த பிரதமர் மோடி உடனே காரை நிறுத்தினார். இந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கி ஓடிய பாதுகாவலர் மதுரை ஆதீனத்தை தடுத்து நிறுத்தி பரபரப்பை கிளப்பிய நிலையில் பிரதமர் மோடி கொடுத்த சிக்னலால் எல்லாமே மாறிப்போனது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை நடத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்தில் அவர் இந்த யாத்திரையை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் யாத்திரை சென்றார். அண்ணாமலையின் இந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அதாவது நேற்று மதியம் கேரளாவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி கோவை சூலூர் விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து உரையாற்றினார். இந்த வேளையில் அவர் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக மற்றும் திமுக அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணியை விமர்சனம் செய்தார். மேலும் இயல்புக்கு மாறாக அதிமுக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை அவர் புகழ்ந்து பேசினார்.

அதன்பிறகு பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை சென்றார். அங்கு சிறு , குறு நடுத்தர டிஜிட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பிரதமர் மோடி மதுரையில் காரில் பயணித்தார். பிரதமர் மோடியின் வாகனம் செல்லும் பாதையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜகவினர் அணிவகுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
மோடி.. மோடி.. என அவர்கள் கோஷமிட்டனர். மேலும் பாரத் மாதா கீ ஜெய் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். பிரதமர் மோடி காரின் முன் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களை நோக்கி கையசைத்து வந்தார். இந்த சமயத்தில் மதுரை ஆதீனம் பிரதமர் மோடியை பார்க்க சாலையோரம் நின்று கொண்டிருந்தார். சாலையில் தொண்டர்களை தடுக்கும் வகையில் கட்டப்ட்டு இருந்த கயிற்றை தாண்டி பிரதமர் மோடி செல்லும் சாலையின் ஓரத்தில் மதுரை ஆதீனம் நின்றார்.
பிரதமர் மோடியின் கார் மதுரை ஆதீனத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பிரதமர் மோடியின் காரின் மீது தொங்கியபடி வந்த பாதுகாவலர் மதுரை ஆதீனம் கயிற்றால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பை தாண்டி வந்து நிற்பதை பார்த்தார். அவர் காரில் நின்றபடியே தள்ளி செல்லும்படி சைகை காண்பித்தார். ஆனால் மதுரை ஆதீனம் அப்படியே நின்றார். இந்த வேளையில் காரில் இருந்து வேகமாக இறங்கி வந்த பாதுகாவலர் மதுரை ஆதீனத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, மதுரை ஆதீனத்தை பார்த்தார். பாதுகாவலர் மதுரை ஆதீனத்தை அனுமதிப்பார் என பிரதமர் மோடி சில வினாடிகள் காரில் காத்திருந்தார். ஆனால் பாதுகாவலர் அவரை அனுமதிக்கவில்லை. இந்த வேளையில் மோடி காரில் இருந்தபடியே மதுரை ஆதீனத்தை விடும்படி சைகை காண்பித்தார். அதோடு அருகே நின்ற பாதுகாவலரிடம் அனுமதிக்கும்படி கூறினார்.
இதையடுத்து அந்த பாதுகாவலர் மதுரை ஆதீனத்தை தடுத்த பாதுகாவலரிடம் தகவலை பரிமாறினார். அதன்பிறகு மதுரை ஆதீனம் சால்வை மற்றும் மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி நடந்து சென்றார். பிரதமர் மோடி காரில் அமர்ந்து இருந்த நிலையில் மதுரை ஆதீனம் அவருக்கு அணிவிக்க மாலை மற்றும் சால்வை எடுத்து சென்றார். ஆனால் மாலை கைநழுவி சாலையில் விழுந்தது. இதனால் சால்வையை மட்டும் பிரதமர் மோடிக்கு அவர் அணிவித்தார். அதன்பிறகு பிரதமர் மோடி, மதுரை ஆதீனம் பரஸ்பரம் கைகூப்பி வணங்கி கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications