டெல்லியில் NDA கூட்டணியில் தொடர்கிறோம்.. தமிழகத்தில் அதிமுகவோடு கூட்டணி இல்லை: அன்புமணி புது கணக்கு!
மதுரை: டெல்லியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தொடர்கிறோம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியில் இல்லை என மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவைச் சேர்ந்த 18 பேரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். மேலும், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரையும் இன்று சந்தித்துப் பேசினார் அன்புமணி ராமதாஸ்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும். என்எல்சி போராட்டத்தின் போது சில சமூக விரோதிகள் நுழைந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டது" எனத் தெரிவித்தார்.
மேலும், என்.எல்.சிகாக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. என்.எல்.சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் தற்போது முப்போகம் விளையும் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா அல்லது அமையாதா என்ப்தை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
திமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, "டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கேற்ப யூகங்களை வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலின் போது எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, சாதாரண அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டது. சாதாரண வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ராகுல்காந்தி வழக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications