படிக்காதவன் அம்பிகா ஸ்டைலில் 1 கிலோ கஞ்சா கடத்திய மதுரை ராணி.. மடக்கி பிடித்த போலீஸ்
மதுரை: கர்ப்பிணி போல் நடித்து 1 கிலோ கஞ்சா கடத்தியதாக மதுரையில் ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் திரைப்படத்தை பார்க்காதவரே இருக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் அதில் வரும் சிரிப்பு காட்சிகளையாவது பார்த்திருப்போம். அந்த படத்தில் டாக்ஸி ஓட்டுநராக ரஜினி நடித்திருப்பார்.
ஆனால் அந்த டாக்ஸியோ கடத்தல்காரர்கள், திருடர்கள் உள்ளிட்டோர் ஏறினால் வண்டியே ஸ்டார்ட் ஆகாது. ஒரு நாள் ரஜினி தனது டாக்ஸியில் சென்று கொண்டிருப்பார். அப்போது நைட் அணிந்து கொண்டு அம்பிகா கர்ப்பிணி போல் வயிற்றை சாய்த்துக் கொண்டு செல்வதை பார்ப்பார்.

டாக்ஸி
உடனே அவர் மீது இரக்கப்படும் ரஜினி, அவரை தனது டாக்ஸியில் அமர வைப்பார். அப்போது டாக்ஸி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்யும். ரஜினி, " லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு.. லட்சுமி... என மூச்சை பிடித்து கொண்டு ஸ்டார்ட் செய்வார். பின்னர் பொறுத்து பொறுத்து பொறுமையிழந்த அம்பிகா யோவ் போயா நான் நடந்து போயிருந்தா கூட இன்னேரம் போய் சேர்ந்திருப்பேனு கூறிவிட்டு இறங்கிவிடுவார்.

ரஜினி டாக்ஸி
பின்னர் வண்டி ஸ்டார்ட் ஆகும். இதனால் ரஜினி அந்த டாக்ஸியை திட்டுவார். பின்னர் மீண்டும் அம்பிகாவை சந்திப்பார். அப்போது குழந்தை பிறந்துடுச்சா, எங்கங்க குழந்தைனு கேப்பார் , அதற்கு போலீஸ் துரத்தும் டென்ஷனில் இருக்கும் அம்பிகா ஆங், ஸ்கூலுக்கு போயிருக்குனு கடுப்பாக சொல்வார்.

கர்ப்பிணி
பின்னர் மீண்டும் அம்பிகா கர்ப்பிணி போல் இருப்பதை காண்பார். இப்படியே போக, ஒரு நாள் அம்பிகா கர்ப்பிணி போல் நடித்து சாராயம் கடத்துவது தெரிய வரும். இப்படியே அந்த கதை நகரும். அது போல் ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாீக நாகமலை புதுக்கோட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரோந்து பணி
இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் ரோந்து சென்று விசாரணை செய்த போது அங்கு கர்ப்பிணி ஒருவர் அங்கும் இங்கும் திருதிருவென முழித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த பெண்ணை விசாரணை செய்தனர். இதில் அவர் கஞ்சாவை பொட்டலமாக மடித்து வயிற்றில் சுற்றி கர்ப்பிணி போல் நடித்தது தெரியவந்தது.

ராணி
போலீஸார் விசாரணையில் அந்த பெண் கீழ்மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராணி என்பது தெரியவந்தது. இவர் தொடர்ந்து அப்பகுதியில் நூதனமான முறையில் கர்ப்பிணி போல் வயிற்றில் கஞ்சா கட்டிக் கொண்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராணியை கைது செய்த போலீஸார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications