விதி மீறினால் தானியங்கி முறையில் அபராதம்! நவீன கேமராக்களை களமிறக்கும்.. மதுரை போக்குவரத்து போலீசார்
மதுரை: போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில். மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறினால் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகள், விபத்து உயிரிழப்புகள், குற்ற செயல்கள் மற்றும் வாகன நெரிசல்களை குறைக்க போக்குவரத்து போலீஸார் ANPR எனப்படும் அதிநவீன கேமராக்களை பயன்படுத்தி வருகின்றனர். இது விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அதன் பதிவு எண்ணை பதிவு செய்யும். இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அபராதம் விதிக்கப்படும்.

இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து விபத்துக்களின் எண்ணிக்கை பெரிய அளவுக்கு குறைந்திருக்கிறது என போலீசார் கூறுகின்றனர். ஆனால் சென்னையில் மட்டுமே தற்போது இந்த கேமராக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில் இதேபோன்று மதுரை நகரிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து துணை ஆணையர் கூறியுள்ளார்.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், 'பொது நலனில் போக்குவரத்துத் துறை' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு வரவேற்று பேசினார். மதுரை மாநகரப் போக்குவரத்துத் துணை ஆணையர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "மதுரையில் விபத்துக்களைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 32 சிக்னல்களும் வினாடிகள் கவுண்டவுன் மூலம் இயக்கப்படுகிறது. சமீபமாக, ரிமோட் கன்ட்ரோல் மூலம் சிக்னல்கள் இயக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்போதைய தலைமுறைக்கு ஏற்ப, ட்ரெண்டிங் ஆக சிக்னல்களில் புதிய, பழைய பாடல் இசைகள், திருக்குறள் உள்ளிட்ட ஆடியோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விரைவில் எல்லா சிக்னல்களிலும் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கேமராக்கள் மூலமாக விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இம்மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவிருக்கிறோம்.
பிரதான சாலைகளில் கடை முகப்பு ஆக்கிரமிப்புகளால், வாகனங்கள் பாதி சாலைகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த நிகழ்வில் ரோட்டரி மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டி, அனைத்து ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சிவா, பில்லி, ஆடிட்டர் சேது மாதவா, பொருளாளர் கதிரவன், 'அத்வி மீடியா' ஆதவன், தொழிலதிபர் மகேந்திரன், 'வழிகாட்டி' சமூக செயற்பாட்டு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications