செல்போனுடன் நாளை நேரில் வாங்க.. டிடிஎஃப் வாசனுக்கு மதுரை போலீசார் சம்மன்!
மதுரை: செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன் அளித்துள்ளது.
யூடியூபரும், பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த மே 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் வாசன். இதையடுத்து மதுரை அண்ணா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் டிடிஎஃப் வாசன். அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஃஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார் ஓட்டுநர் உரிமம் பெற டிடிஎஃப் வாசன் LLR பெற்றுள்ள நிலையில் அதனை வைத்து தேசிய நெடுச்சாலையில் வாகனத்தை இயக்கி உள்ளார் என வாதம் முன்வைக்கப்பட்டது.
காரை வேகமாக ஓட்டவில்லை என்றும் தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதாகவும் டிடிஎஃப் வாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி டிடிஎஃப் வாசனுக்கு, 10 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில் செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்டு வருகிறார் டிடிஎஃப் வாசன். இன்னும் ஒரு வாரத்திற்கு அவர் கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில் நாளை (ஜூன் 3) தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் தனது செல்போனுடன் நேரில் ஆஜராகுமாறு யூடியூபர் டிடி1எப் வாசனுக்கு அண்ணாநகர் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். இன்று கையெழுத்து போட வந்த வாசனிடம் போலீசார் நேரடியாக சம்மனை அளித்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் வலது கை முறிந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது கார் ஓட்டி வருகிறார் டிடிஎஃப் வாசன்.












Click it and Unblock the Notifications