மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு? ஐகோர்ட் சரமாரி கேள்வி!
மதுரை: மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வருபவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு என உயர்நீதிமன்றக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியின் தலைவர் பொன்.முருகேசன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் பொன்.முருகேசன்.

அவர் தனது மனுவில், "தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக எங்கள் கட்சி உள்ளது. நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள் சமூகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று தரும் பணியை செய்து வருவதால் என் மீது பலர் விரோதத்தில் உள்ளனர். இதனால் எனக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அளித்த அனுமதி அடிப்படையில் எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எனது துப்பாக்கியை திருச்சி துவாக்குடி காவல் நிலையத்தில் சமர்ப்பித்து விட்டேன். தற்போது தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எனக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி, "மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு எதற்கு" என்று கேள்வி எழுப்பி, தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய பொன்.முருகேசனின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றக் கிளை, "அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு எதற்கு? அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சேவையாற்றத்தான் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை.
தேசிய கட்சிக்கு தலைவராக இருக்கும் முருகேசனுக்கு காவல்துறை பாதுகாப்பு எதற்கு? அப்படி பாதுகாப்பு தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாமே" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications