சிலை கடத்தல் விவகாரம்: முகாந்திரம் இருக்கு.. செக் வைத்த சிபிஐ.. அதிர்ச்சியில் பொன் மாணிக்கவேல்
மதுரை: சிலை கடத்தல் வழக்கு விசாரணையில், கடத்தல் கும்பலுடன் இணைந்து முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய சொல்லி மாணிக்கவேல் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது சிபிஐ, பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கோயில்களில் இருந்து சிலைகள் மாயம் ஆவது தொடர்பாக விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கான ஐஜியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் சிறப்பு படையினர் பல்வேறு சிலை கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் பொன. மாணிக்கவேல் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறார் என்றே தகவல் வெளியாகி வந்தது.

சிலை கடத்தல் திருப்பம்
அடுத்தடுத்து வந்த தகவல்கள் திருப்பத்தை ஏற்படுத்தின. திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாட்சா என்பவர், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், பொன். மாணிக்கவேல் தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இப்படி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து பொன் மாணிக்கவேல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதனால் பொன். மாணிக்கவேல் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் கோயில்களில் நடைபெறும் ஊழல்களை ஊடகங்களில் பேட்டியாக கொடுக்க தொடங்கினார்.
சிபிஐ கிடுக்குப்பிடி
பொன். மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் கூட பொன். மாணிக்கவேலின் சென்னை பாலவாக்கம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சிலை கடத்தல் தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய சொல்லி பொன். மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
முகாந்திரம்
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் குற்றப் பத்திரிகையில் விரிவாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளோம். அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்று வாதிட்டனர். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இறுதி உத்தரவு பிறக்கப்படும் என்று தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications