வெள்ளிக்கிழமை கோவிலை திறக்காவிட்டால் சனி பிடித்தே தீரும்.. தமிழக அரசுக்கு பொன். ராதாகிருஷ்ணன் சாபம்
மதுரை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று கோவில் திறக்கப்படாவிட்டால் சனி பிடித்தே தீரும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சாபமிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க கோரி மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சி சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜகவின் ஓபிசி மாநிலத் தலைவர் லோகநாதன், முன்னாள் மத்திய அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

சனி பிடித்திருக்கிறது
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஜனவரி 1-ந் தேதி கிறிஸ்தவர்கள் புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள். அது அவர்களது உரிமை. அனைத்து மதத்தினரும் தங்களது விழாக்களைக் கொண்டாடட்டும். அதுபோல எங்களது விழாக்களை நாங்கள் கொண்டாடுகிறோம். அப்படி விழாக்களைக் கொண்டாடும் எங்களை மட்டுமே தடுப்பது என்று சொன்னால் உங்களுக்கு சனி பிடித்து இருக்கிறார் என்று நாங்கள் கருதுகின்றோம்.

திமுகவினரின் கோவில் தரிசனம்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்ககூடிய 90 சதவீதத்தினர் இந்துக்கள். அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் பலர் இந்த கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றார்கள். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷம். நான் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். இங்கு வரக் கூடியவர்கள் அதிகம் பேர் திமுகவை சேர்ந்தவர்கள்தான் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். செய்த பாவங்களை போக்க கோவில் முன்பு சாஷ்டாங்கமாக அவர்கள் விழுகின்றனர்.

கோவில்களை திறக்க வேண்டும்
இந்த நாட்டில் கோடி இந்துக்கள் வழிபட்டு வரும் கோவில்களை வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றேன். இதனை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகையால் தமிழக அரசு வெள்ளிக்கிழமை கோவிலை திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு சனி பிடிக்கும்
அப்படி நீங்கள் வெள்ளிக்கிழமையன்று கோவிலைத் திறக்கவில்லை என்றால் காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட எந்த கோவிலுக்கு சென்றாலும் உங்களது பாவம் தீராது. உங்களுக்கு (தமிழக அரசுக்கு) சனி பிடித்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. இது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மக்களின் கோரிக்கைக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் அப்படி நாங்கள் போராடும் பொழுது இது மதசார்பற்ற இந்தியாவுக்கு எதிரானது என்றால் அந்த மதசார்பற்ற முறையை தீயிட்டுக் கொளுத்துவோம், ஆலயங்களுக்கு நுழைவதில் உரிமை மறுக்கப்படும் என்றால் ஆலயங்களுக்கு நுழைவதை நுழைந்தே தீருவோம் என முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications