“10 வருஷம்.. 3 கட்சிகள் தாவி..” குஷ்புவை இழுத்த பிரகாஷ் ராஜ்! சுந்தர்.சி கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!
மதுரை: மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி, அதிமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில் மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், குஷ்பு, சுந்தர்.சி மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் மதுரையில் பிரகாஷ் ராஜ் பேசியது கவனம் பெற்றிருக்கிறது.

இயக்குநர் டூ வேட்பாளர்
பிரகாஷ் ராஜ் பேசியதாவது, "சுந்தர்.சி நல்ல இயக்குநர். ஆனால், இயக்குநராக அவர் எப்படி உருவானார்? அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்கள் முன்னர் வரை படப்பிடிப்பில் இருந்தார். திடீரென உங்களை வேட்பாளராக அறிவித்ததால், நீங்களே ஆச்சரியப்பட்டீர்களா இல்லையா? 3 நாட்களுக்கு முன்னர் வரை மதுரை மக்களுக்கோ, தமிழகத்திற்கோ, இந்திய அரசியலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாம இருந்த நீங்க.. வேட்பாளராக அறிவித்த உடனே வந்துடுவீங்களா.. மதுரை மக்கள் என்ன ஏமார்ந்தவர்களா?
யானை மாலை போட்ட கதை
இன்னும் விரிவா பேசனும்னா.. நீங்க எந்த கட்சி? புதிய நீதிக்கட்சி என ஒரு கட்சி இருக்கிறது. அதன் வேட்பாளராக இறங்கியிருக்கிறீர்கள். அக்கட்சியின் கொள்கை என்ன? அது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. ஏன்னா பாஜக நேரா வர முடியாது இல்லையா! மதுரை மக்களுக்கு பாஜகவை பற்றி தெரியும். எனவே கூட்டணி கட்சிக்கு 2 சீட் கொடுத்தாங்க. அதுல திடீர்னு உங்களை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க. இது யானை மாலை போட்ட கதைதான்.
எம்எல்ஏ பதவி
இப்போ நீங்க சிறந்த இயக்குநராக இருக்கிறீங்க. காரணம், அதற்கான முயற்சி, உழைப்பு. இந்த இடத்திற்கு வர எத்தனை முயன்றிருப்பீர்கள்? ஆனால் எம்எல்ஏ பதவி மட்டும் ஈஸியா கிடைச்சிடுமா?
களத்துல என்ன நடந்துட்டு இருக்கு? நமக்கு என்ன தகுதி இருக்கு? அப்படியே சும்மா பேசிட்டு கடந்து போயிடலாம் என வந்திருக்கிறீர்களா? ஆட்சி எனில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை மட்டும் பேசி கடந்துவிட முடியுமா? நிறைகளை பேசுவதில்லையா? இது எந்த மாதிரியான அரசியல்?
குஷ்புவை இழுத்த பிரகாஷ் ராஜ்
10 வருஷமா 3 கட்சிகளை தாண்டி.. இப்போ ஏதோ அரசியல் பேசிட்டு இருக்காங்க உங்க மனைவி குஷ்பு. அவங்களுக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிப்பதில்லையா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குஷ்பு ரியாக்ஷன்
பிரகாஷ் ராஜின் பேச்சு, விவாதங்களை கிளப்பியிருக்கும் நிலையில் இது குறித்து குஷ்பு பதிலளித்திருக்கிறார். "பிரகாஷ் ராஜ் எனக்கு நல்ல நண்பர்தான். இருப்பினும் அவர் தேர்தலில் நின்று, டெபாசிட் கூட வாங்க முடியாமல் எப்படி தோற்று போனார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கும், சுந்தர் சி-க்கும் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை அவரே யோசித்து பார்க்க வேண்டும்.
பிரகாஷ் ராஜ் என்ன அரசியல்வாதியா?
சுந்தர் சி-க்கு எப்படி சீட் கிடைத்தது என கேள்வி எழுப்பியிருக்கிறார்? ஒருவேளை டைம் இருந்தால் அவரே யோசித்து எப்படி சீட் கிடைத்தது என்பதை சொல்லட்டும். சுந்தர் சி அரசியல்வாதி இல்லை என பேசும் பிரகாஷ் ராஜ், அவர் தேர்தலில் போட்டியிட்டபோது மட்டும் அரசியல்வாதியாகவா இருந்தார்? கள அரசியல்வாதியா அவர்?
கூத்தாடி என்கிற விமர்சனம்
எங்களைப் பார்த்து யார் சினிமா சங்கி, கூத்தாடி என்று சொன்ன பி.டி.ஆருக்கும், தொலைக்காட்சியில் இருக்கும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் என்ற கூத்தாடிகள் தானே தேவைப்படுகின்றனர் பிரச்சாரம் செய்ய. அப்படி இருக்கையில் எங்களை மட்டும் கூத்தாடி என்று பேசுவது எப்படி நியாயம்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications