அதிமுகவின் மாஸ்டர் பிளான்.. மதுரைக்கு பிரேமலதா விஜயகாந்த்... திகிலுடன் காத்திருக்கும் திமுக!
மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட போவதாக தகவல் கசிந்துள்ளது.
Recommended Video

மதுரை: விஜயகாந்த் இன்னும் ஊர் வந்து சேரவில்லை.. அதற்குள் மதுரை வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் களமிறங்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம் வரப்போகிறார். அவர் வந்தவுடன் கூட்டணி சம்பந்தப்பட்ட விஷயங்கள், சீட் விவகாரங்கள் எல்லாம் முடிவு செய்யப்படும்.
குறிப்பாக விஜயகாந்த் வருகைக்காக அதிமுக ஆவலுடன் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கூடவே டிடிவி தினகரனும் விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிகிறது.

பிரேமலதா
திமுக இதுவரை தேமுதிகவை கண்டுகொள்ளாத நிலையில், எப்படி பார்த்தாலும் அதிமுகவுடன்தான் விஜயகாந்த் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு. அப்படி கூட்டணி உறுதியானால், மதுரை வேட்பாளராக பிரேமலதா நிறுத்தப்படுவார் என தெரிகிறது.

கட்சி தொடக்கம்
மதுரை விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன் மதுரையில்தான் அவர் வளர்ந்தார். அவரது தந்தையின் அரிசி ஆலையில்தான் பணியாற்றினார். பிற்காலத்தில் ஸ்டாராக உயர்ந்தாலும், சொந்த ஊரான மதுரையில்தான் தேமுதிகவைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த புதிதில் மதுரையில்தான் போட்டியிட ஆசைப்பட்டார்.

ரசிகர்கள் பலம்
ஆனால், தனது ரசிகர்கள் பலம் வட மாவட்டங்களில் அதிகம் இருப்பதாலும், தன்னை தீவிரமாக எதிர்த்த பாமகவுக்குப் பதில் அளிக்க விரும்பியும்தான், விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தார். அப்போது விஜயகாந்த் ஆசைப்பட்டதை இப்போது பிரேமலதா நிறைவேற்ற ஒரு யோசனை நடந்து வருகிறதாம். அது மட்டுமில்லை, மதுரை மத்திய தொகுதியில் விஜயகாந்துக்கு சொந்த செல்வாக்கு இன்னமும் இருப்பதால் மக்கள் ஆதரவும் சுலபமாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அண்ணி
ஒவ்வொரு முறை விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு போகும்போதெல்லாம், அவர் மீண்டும் பழையபடி அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று அலங்காநல்லூர் உள்ளிட்ட முனியாண்டி கோயிலில் கிடாவெட்டி பலமுறை வேண்டுதலும் நடத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது "அண்ணி"யை வெற்றி பெற வைக்க எல்லாவிதமான உதவிகளையும் கட்டாயம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இணைந்து தேர்தல் பணி
மேலும், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக தொண்டர்கள் தேமுதிக மீது வெறுப்பில் இருந்தனர். ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லாத நிலையில், காலமும் கலந்துவிட்ட நிலையில், பழைய விஷயத்தை மறந்து, இரு தரப்பு தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள்.

மதுரை மருமகள்
பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் பிரேமலதா பின்னியெடுத்து விடுவார். இப்போது மதுரையின் மருமகள் என்பதால், அதிக உரிமையுடனே பிரச்சாரத்தை எதிர்கொள்வார். மேலும் ஸ்டார் வேட்பாளர் என்ற முத்திரையும் உள்ளது. பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் மதுரைக்கு வந்துவிட்டால், அவ்வளவுதான்... கிட்டத்தட்ட வெற்றிதான்!!

திமுக வேட்பாளர்?
அப்படி அதிமுக பிரேமலதாவுக்கு மதுரையை கொடுத்தால், திமுக எப்படி இதனை எதிர்கொள்ளும் என தெரியவில்லை. அழகிரி கட்சிக்குள் இருந்தாலாவது திமுக தைரியமாக இருக்கலாம். இப்போது அவரையும் கண்டுகொள்ளாத நிலையில் அதிமுகவுக்கு நெருக்கடி தரும் பலமான நபர் திமுக தரப்பில் யார் என்பது பெரிய கேள்விதான்!!

விஜயகாந்த் வரட்டும்
ஒருவேளை விஜயகாந்த் தினகரனுடன் சேர்ந்தாலும் திமுகவுக்கு இதே நிலைமைதான். முதலில் விஜயகாந்த் வரட்டும்.. கூட்டணி உறுதியாகட்டும்.. பிறகு திமுக எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications