விஜயகாந்த் என்கிட்ட லைவ்வா பேசினாரு! பிரேமலதா கலங்கியதும்! அதிர்ச்சியில் உறைந்த தேமுதிக தொண்டர்கள்
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்னிடம் லைவாக பேசினார் என பொதுச் செயலாளர் பிரேமலதா சொன்னதும் அங்கிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விஷயத்தை சொல்லும் போதே பிரேமலதாவும் கலங்கினார்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் எல்லா கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் "இல்லம் தேடி உள்ளம் நாடி" என்ற பெயரில் பிரச்சாரத்தை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் மதுரையில் இன்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், எத்தனையோ நிகழ்வுகளுக்கு நாங்கள் போய்ட்டு வருகிறோம், உங்கள் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் மதுரைக்குள் வரும் போது மட்டும் எனக்கும் கேப்டனுக்கும் இனம் புரியாத சந்தோஷம்.
நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் வேலூர் மாவட்டம். விஜயகாந்த் பிறந்து வளர்ந்தது மதுரை மாவட்டம். மதுரையின் பெருமைகள் பற்றி விஜயகாந்த் என்கிட்ட சொல்லி சொல்லி என்னை முழுமையாக மதுரை மருமகளாக, உங்கள் வீட்டு பொண்ணாகவே மாற்றிவிட்டார்.
இந்த மேடையில் நான் விஜயகாந்த் படத்திற்கு மலரஞ்சலி செலுத்த வந்தேன். அப்போது ஒரு நிமிடம் ஆடி போய்விட்டேன். ஏனென்றால் தினமும் கேப்டன் கோயிலில் அவருக்கு பூஜை செய்கிறேன். எத்தனையோ நிகழ்வுகளில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருக்கிறேன்.
ஆனால் இப்போது என்னவென தெரியவில்லை. நான் போட்டோ கிட்ட போகும் போது விஜயகாந்த் என்கிட்ட லைவா பேசுற மாதிரி ஒரு ஈர்ப்பு சக்தியை என்னால் பார்க்க முடிந்தது. கண்களிலும் முகத்திலும் போட்டோவிலும் ஒரு ஜீவன் இருக்கிறது.
மதுரையின் பெருமையை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்த ஒரு மகா மனிதர். கேப்டன் மதுரையில் பிறந்ததால் அவருக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த மதுரைக்கும் பெருமை!
தற்போது எத்தனையோ கட்சியினர் மாநாடு நடத்துறாங்க, பொதுக் கூட்டத்தில் நடத்துறாங்க ஆனால் மாநாட்டுக்கு பெயர் போனவர் உங்கள் மண்ணின் மைந்தர் விஜயகாந்த்தான். 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி இதே மதுரையில் விஜயகாந்த் நடத்திய மாநாடுதான் உலகளவில் நம்பர் 1 மாநாடாக உள்ளது.
அந்த மாநாட்டில் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி ஒரு சரித்திர சாதனையை படைத்தது. 2ஆம் இடத்தில் எந்த கட்சி இருக்கிறது என பார்த்தால் அதுவும் தேமுதிகதான். சேலத்தில் நடத்திய மாநாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சரி மூன்றாவது இடத்தில் எந்த கட்சி இருக்கிறது என பார்த்தால் சென்னையில் தேமுதிக நடத்திய இளைஞர் மாநாடு. 3 இடங்களுக்கு கீழ்தான் மற்ற கட்சிகளின் மாநாடுகள் இடம் பிடித்துள்ளன. இதில் திருச்சியில் நடந்த மகளிர் மாநாடு ஒரு வரலாறு! ஆண்ட கட்சி ஆளும் கட்சி எல்லாவற்றுக்கும் உதாரணமாக இருப்பது தேமுதிக!
பெண்களுக்கு மஞ்சள் நிற புடவையை கொடுத்து கவுரத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இதுவரை எந்த கட்சியும் பெண்களுக்கு ஒரு யூனிபார்ம் கொடுத்து அங்கீகரித்த வரலாறு இல்லை. இவ்வாறு பிரேமலதா பேசினார். இந்த நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்தார். கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்ட போது பிரேமலதாவின் தாயார் அம்சவேணி மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்ததாக உதயகுமார் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications