அமைச்சராகப் போகும் தேமுதிகவினர்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்! தடாலடியாகப் பேசிய பிரேமலதா!
சென்னை: தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் எனவும், தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை கூடல் நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளிடையே பேசினார்.
அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது தேமுதிக என பெருமையுடன் சொல்கிறேன். தேமுதிகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் செய்திகள் வர உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
SIR பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. தேமுதிகவின் அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள் SIR முறைகேடு நடப்பதாகவும், ஆண்ட கட்சி முறையாக நடப்பதாகவும் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கேப்டனின் அனைத்து நிகழ்வுகளும் மதுரையில் இருந்து தான் தொடங்கியது. 2005 கேப்டன் தொடங்கிய கட்சியின் முதல் மாநாடு உலகிலேயே நம்பர் ஒன் மாநாடு என பெருமை பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் எந்த கட்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது என பார்த்தால் அதில் முதல் இடத்தை பிடித்தது தேமுதிகவின் முதல் மாநாடு தான். மதுரையில் நான் செல்லாத இடங்களே இல்லை. அனைத்து தேர்தலிலும் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நான் பணியாற்றி உள்ளேன். 2011 மதுரையில் திருப்பரங்குன்றம், மதுரை மத்திய தொகுதியை வென்றது தேமுதிக. கலைஞர் ஜெயலலிதா இருக்கும்போது மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கிய கட்சி தேமுதிக. கேப்டனின் கனவு லட்சியம் நிறைவேற 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறைவேறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.
தேமுதிக கூட்டணி
வருகின்ற 2026 சட்டமன்றத்தில் கூட்டணி அமைச்சரவை அமையும். தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. பிரேமலதா என்ற உடன் பிரதமர் என கட்சி நிர்வாகி கூறுகிறார். கடவுள் ஒருவர் தான் இறுதி எஜமானார். அவர் இறுதி கணக்கு போட்டால் யாரும் அதை தடுக்க முடியாது. விஜயகாந்த் முதல்வராகி இருந்தால் கூட ஊழல் குற்றசாட்டுக்களை வைத்திருப்பார்கள். ஆனால் அதுபோல எந்த குற்றச்சாட்டும் எழுந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கடைசி வரை மக்கள் மனங்களில் நிரந்தரமாக இருந்துவிட்டார்.
தேமுதிக வளர்ச்சி
தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் எனவும், தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்" என்றார். முன்னதாக மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் வருகிற 26 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மதுரையில் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் கட்சிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவும் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications