மதுரையில் கண்கலங்கிய பிரேமலதா.. விஜயகாந்தை நினைத்து அழுத தேமுதிக பொதுச்செயலாளர்! 3 சிறுமிகள் யார்?
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் 3 சிறுமிகள் விஜயகாந்த் படப்பாடலை பாடினர். அதைக்கேட்டவுடன் பிரேமலதா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வேளையில் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில், மதுரை தேமுதிக நிர்வாகி அழகர்சாமியின் மகன் திருமண விழா கடந்த 4ம் தேதி மதுரையில் நடந்தது.
இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று தலைமையேற்று நடத்தி வைத்தார். அதன்பிறகு திருப்பரங்குன்றம் தனியார் விடுதியில் பிரேமலதா தனது மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தங்கியிருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர்.

அப்போது 3 சிறுமிகள் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பாடல் பாடினர். நடிகர் விஜயகாந்த் நடித்த 'என் ஆசை மச்சான்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‛‛ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வைச்சு சேதி சொன்ன மன்னவரு தான்..'' என்ற பாடலை பாடி காண்பித்தனர். அந்த பாடலை பிரேமலதா விஜயகாந்த் கேட்டபடியே இருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார். கண்களில் இருந்து கண்ணீர் வர பிரேமலதா தனது கையால் துடைத்தார். அதன்பிறகு முழு பாடலையும் பாடி முடித்த சிறுமிகள் 3 பேரையும் கட்டி அணைத்து பிரேமலதா பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி விசாரித்தபோது, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டனின் 3 மகள்கள் என்பது தெரியவந்தது.













Click it and Unblock the Notifications