மக்கள் சந்திப்பின் போது மதுரை மேயர், கவுன்சிலர்களை தவிர்க்கும் பிடிஆர்.. பின்னணியில் முக்கிய காரணம்!
மதுரை: ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை தனது சொந்த தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிவது வழக்கம். நேற்று மக்களை சந்தித்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களை தவிர்த்திருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே மதுரையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தரப்பு மதுரையின் பல்வேறு தொகுதிகளிலும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தரப்பும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்து, அடுத்தக் கட்ட பணிகளை செய்து வருகிறது.

அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார். இம்முறை மதுரையில் மாநகராட்சியில் நடந்த ஊழல் விவகாரம் மிகப்பெரிய சிக்கலை திமுகவுக்கு உருவாக்கி இருக்கிறது. மாநகராட்சி சார்பாக சாலைப் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், தண்ணீர் குழாய் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் ஊழல் விவகாரத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தொடர்ச்சியாக இருப்பதே திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் உணர்ந்தே இருக்கிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் தொகுதியில் உள்ள மக்களை சந்திப்பது வழக்கம்.
அப்போது மக்களின் கோரிக்கைகள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த சந்திப்பின் போது எப்போது மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று மக்களை சந்தித்த போது மேயர், கவுன்சிலர்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவிர்த்துவிட்டு சென்றுள்ளார்.
இதனால் மதுரை மத்திய தொகுதியில் உள்ள பகுதிச் செயலாளர், கிளைச் செயலாளர்களுடன் மட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்தது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் சொத்து வரி முறைகேடு விவகாரம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்.
மதுரை மேயராக இந்திராணியை கொண்டு வந்ததும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத அமைச்சர் என்ற பெயர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இருக்கும் நிலையில், மாநகராட்சியில் அதிகாரத்தில் இருக்கும் நபர்களை சமீப காலமாக அமைச்சர் தவிர்த்து வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications