பாஜகவினரின் போராட்ட அழைப்பை புறக்கணித்த திருப்பரங்குன்றம் மக்கள்.. கடைகள் வழக்கம்போல் திறப்பு!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த இந்துத்வா அமைப்புகள் விடுத்த அழைப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் இன்று கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. பாஜக, இந்துத்வா அமைப்புகள் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கடைகள் திறந்துள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்றவில்லை. இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் நேற்று முன் தினம் மாலை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பாக நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜரானார். இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர், வழக்கறிஞர்களுடன் ஏராளமானோர் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.
இதனால் காவல்துறைக்கும் வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மலைக்குச் செல்லும் பாதையின் முன்பாக அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியும் கூட யாரும் செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பழங்காநத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது. திருப்பரங்குன்றம் வீதிகளில் பேரணியாக சென்று கடைகளை அடைக்க வேண்டாம் என திமுக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.
பாஜக, இந்து அமைப்புகள் சார்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்த திமுக அரசுக்கு எதிராக கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. போராட்டத்துக்கு விடுத்த அழைப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications