அரசு நிலம்.. மாற்றி யோசித்த புதுக்கோட்டை மக்கள்.. பல கோடி சம்பாத்தியம்? ஐகோர்ட் அதிரடி
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து சாலைப்பணிக்கு கொடுத்து இழப்பீடு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த நபர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி மாநில வருவாய்த்துறை செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் புறம்போக்கு நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பட்டாவாக மாற்றி, பின் அரசிடமே இழப்பீடு பெறுவது என்பது மிகப்பெரிய மோசடியாகும். நீர்நிலைகள் அல்லது அரசுப் புறம்போக்கு நிலங்களை (மழைக்காலங்களில் மட்டும் நீர் தேங்கும் பகுதிகள் போன்றவை) அடையாளம் காண்கிறார்கள்.

மோசடி எப்படி நடக்கிறது
அந்த நிலத்தில் வீடற்றவர்கள் நீண்ட நாட்களாக வசிப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பின்னர், போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன் அடிப்படையில் அந்த நிலத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார்கள். இந்த மோசடியில் மிக முக்கியப் பங்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உண்டு. இவர்கள் முறைகேடாகப் பட்டா மாறுத செய்து தந்துவிடுவதாக புகார்கள் உள்ளது.
பட்டா பெற்று கிரையம் செய்கிறார்கள்
பட்டா கிடைத்தவுடன், அந்த நிலத்தை மற்றவர்களுக்கு அடுத்தடுத்து கிரையம் (விற்பனை) செய்து சட்டப்பூர்வமான சொத்து போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் அரசு சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது, இந்த நில உரிமையாளர்கள் பட்டாவைச் சமர்ப்பித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து பல கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மோசடியாகப் பெறுவதாக கூறப்படுகிறது. இப்படியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளன. அதேபோல் இப்படியான சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டையில் வழக்கு
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த காசிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "மாத்தூர் கிராமத்தில் மழைக்காலங்களில் மட்டும் நீர் தேங்கி நிற்கும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வீடு இல்லாத பலர் நீண்ட நாட்களாக வசிப்பதாகவும், அதனால் அந்த நிலங்களை அவர்கள் அனுபவிக்கும் வகையில் மாற்றி போலி ஆவணங்கள் மூலம் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள் பட்டா மாறுதல் செய்து உள்ளனர். பின்னர் அந்த நிலத்தை கிரையம் செய்து விட்டனர்.
திருச்சி-துவாக்குடி சாலை
பின்னர் திருச்சி-துவாக்குடி சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மேற்கண்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தனிநபர்களிடம் இருப்பதாக பட்டாவை சமர்ப்பித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பல கோடி ரூபாயை இழப்பீடாக தனிநபர்கள், அதிகாரிகள் பெற்றிருக்கிறார்கள்.
வருவாய்துறை செயலாளருக்கு நோட்டீஸ்
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து வருவாய்த்துறை செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்கள்.












Click it and Unblock the Notifications