அப்போ சத்யராஜ் என்ன செய்வாரு? எடப்பாடிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்! இது எம்ஜிஆர், ஜெயலலிதா “ரூட்”
மதுரை: அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்று புதிய பட்டம் வைக்கப்பட்ட நிலையில், நடிகர் சத்யராஜுக்கும் இதேபோன்ற பட்டமே இருப்பதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா தினகரன் தரப்புக்கு இடையே முத்தரப்பு மோதல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் பூதாகரம் எடுத்தது. பல்வேறு வழக்குகள், இடர்பாடுகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து கட்சிப் பணிகளில் அவர் ஈடுபட்டாலும், ஓ பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு குறைவாக இருப்பதாக பேச்சு அடிபட்டது. விரைவில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தென் மாவட்டங்களிலும் தன்னுடைய பலத்தை காட்ட வேண்டிய தேவை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில்தான் மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட அதிமுக முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இன்று மதுரை வலையங்குளத்தில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மதுரையில் கலந்துகொள்ளும் மிகப்பெரிய கூட்டம் இதுவாகும். இந்த விழாவில் பங்கேற்க நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பங்கேற்க மதுரைக்கு வந்தடைந்தார்.
வழிநெடுகிலும் அதிமுகவினர் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். மதுரை அருகேயுள்ள நடைபெற்று வரும் இந்த மாநாட்டுக்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, மிகப்பெரிய பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமரும் வகையில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலை 7.45 மணிக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். அவருக்கு 3,000 அதிமுக தொண்டர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றி உள்ளது. இந்த கூட்டத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமிக்கு, "புரட்சித் தமிழர்" என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு "புரட்சித் தலைவர்" என்ற பெயரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு "புரட்சித் தலைவி" என்று பட்டம் இருப்பதைபோன்றே அதே ஓசையில் ஒலிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சித் தமிழர்" என்ற புதிய பட்டத்தை இந்த மாநாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இது பிரபல நடிகர் சத்யராஜின் பட்டம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. "புரட்சித் தமிழன்" என்று சத்யராஜுக்கு பட்டம் உள்ள நிலையில், தமிழன் என்பதை தமிழர் என்று மாற்றி "புரட்சித் தமிழர்" என்று பட்டம் கொடுத்து இருக்கிறார்கள். அதே சமயம் புரட்சித் தமிழர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications