"சிவனை வழிபட்டாலே..." தொடரும் ராஜராஜ சோழன் சர்ச்சை.. டாக்டர் கிருஷ்ணசாமி பரபர கருத்து
மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கடந்த 1950களில் கல்கி எழுத்தில் வெளியானது தான் பொன்னியின் செல்வன். சோழர்கள் பற்றிய இந்த வரலாற்றுப் புனைவு 5 பாகங்களாக வெளியானது.
பலரது முயற்சிக்குப் பின்னர், இந்த நாவலை மணிரத்தினம் வெற்றிகரமாகப் படமாக எடுத்து உள்ளார். மொத்தம் இரு பாகங்களாகப் பொன்னியின் செல்வன் உருவாகி உள்ள நிலையில், முதல் படம் சமீபத்தில் வெளியானது.

வெற்றிமாறன்
விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளது. இத்திரைப்படம் வெளியான பின்னர் சோழர்கள் குறித்து சமூகத்தில் சர்ச்சை எழுந்து உள்ளது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை வேண்டும் இல்லையென்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும்.

டாக்டர் கிருஷ்ணசாமி
வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று அவர் கூறி இருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்த விவகாரத்தில் கருத்து கூறி இருக்கிறார்.

தூய்மை
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மாநிலம். ஆனால், தூய்மையான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை. எனவே, தூய்மை குறித்த பொதுமக்களிடையே நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காகவே தனியாக மக்கள் இயக்கத்தை உருவாக்க உள்ளோம். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மக்கள் இயக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம்.

வன்முறை
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. இதைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 1இல் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திரைப்படங்கள் முழுக்க ஆபாசம், அரிவாள் கலாசாரம் பேசிவிட்டு கடைசி ஒரு நிமிடம் அதெல்லாம் தவறு என்று சொல்லவதை ஏற்க முடியாது. விருமாண்டி, கொம்பன் உள்ளிட்ட வன்முறை படங்களை நாங்கள் எதிர்த்தோம். அப்போது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்றனர். ஆனால், இப்போது திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசுகின்றனர்.

அடிப்படை தெரியவில்லை
மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதைப் போலவே சினிமா என்ற மாயைக்கும் இளைஞர்கள் அடிமையாகின்றனர். நமது நாட்டில் பஞ்ச பூதங்களை வழிப்படும் முறை உள்ளது. சிவபெருமானை வழிப்படும் ஒருவர் இந்துவாகத் தானே இருக்க முடியும். மதம் பற்றி அடிப்படை தெரியாமல் படம் எடுக்கிறார்கள். ராஜராஜ சோழனுக்கு இந்து என்ற முத்திரையை யார் கேட்டது.

பிரிவுகள் உள்ளன
இந்து மதத்தில் மட்டுமில்லை அனைத்து மதங்களிலும் பல பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறித்தவம், முஸ்லிம், உள்ளிட்ட எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளது. இந்து மதத்தில் மிக முக்கியமானது உருவ வழிபாடு. பாரம்பரியம், கலாசாரம் பற்றித் தெரிந்து கொண்டு பொதுத் தளத்திற்கு வரவேண்டும். இல்லையென்றால் நமது கலாசாரம், பண்பாடுகள் சீரழியும் அபாயம் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications