முரசு, தாமரை, மாம்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
திருமங்கலம்: தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் இவர்கள் போட்டியிட்ட 38 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.
இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மோடியா லேடியா என கர்ஜித்தவாறே 37 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்தவர் ஜெயலலிதா.

பாஜக நிர்வாகி
ஆனால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. கடும் தோல்விக்கு என்ன காரணம் என கட்சிகள் அனைத்து ஆராயத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி பெறாததற்கு காரணம் அதிமுக என பாஜக நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

விரிசல்
இதுபோன்று தங்கள் தோல்விக்கு உண்மையான காரணத்தை ஆராயாமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தற்போது கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் அளவுக்கு ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இரட்டை இலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திரளியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்துக்கே வாக்கு கேட்டு பழகிவிட்டோம்.

இரட்டை இலை
இந்த நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தோம். கூட்டணி கட்சிகளின் சின்னங்களையும் அதன் வேட்பாளர்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்குள்ளாகவே தேர்தல் முடிந்து போய்விட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேடி பார்த்துவிட்டு இல்லாததால் மக்கள் ஏதேதோ கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டனர் என தெரிவித்தார்.

சலசலப்பு
தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதில் பிரச்சினை என்றாலும் பரவாயில்லை, அவர்களின் சின்னத்தை அறிமுகப்படுத்த பெரும் பாடுபட்டதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications