சாகப் போற நேரத்தில் சங்கரா.. அதிமுக-பாஜக கூட்டணி.. எடுபுடிகளை வைத்து அவதூறு! ஆர்பி உதயகுமார் அட்டாக்
மதுரை: அதிமுக, பாஜக கூட்டணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இன்றைக்கு எடுபுடிகளை வைத்து அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள் மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தோறும், கழக அம்மா பேரவை சார்பில், திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் தற்போது தமிழ்நாட்டு மக்களின் உயிர்ச்சொல்.
52 ஆண்டு காலம் மக்களுக்கு சேவையாற்றி வந்த இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்தார். அதனை தொடர்ந்து இந்த இயக்கத்தை மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக அம்மா ஜெயலலிதா உருவாக்கி காட்டினார்.

பொது வாழ்க்கையிலே பல்வேறு அரசியல் காலகட்ட நிலையில், இரு பெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை குறைத்து மதிப்பிட்டவர்கள் கழத்திலே தோற்றுப் போய் உள்ளார்கள். இந்த இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவையும் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு முறை தீர்ப்பு. இது தமிழகம் மட்டுமல்லாது. இந்தியாவே அறிந்த செய்தி தான். இன்றைக்கு இந்த இரு பெரும் தெய்வங்களின் மறு உருவமாக உள்ள கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரை குறைத்து மதிப்பீட்டவர்கள் களத்தில் காணாமல் உள்ளார்கள் தோற்று போய் உள்ளார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை நம்பாமல் இருப்பவர்கள் கெட்டுப் போய் இருக்கலாம். அது நம் கவனத்தில் வருவதில்லை.அந்த வரலாற்றில் தொடர்ச்சியாக தான் எடப்பாடியாரை நம்பி கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமல் இருந்தால் அவர் பொறுப்பு ஏற்க முடியாது.
ஆகவே இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக தோற்றுவித்தாரோ, புரட்சித்தலைவி அம்மா எந்த நோக்கத்திற்காக உழைத்தாரோ, அந்த நோக்கத்திற்காக இன்றைக்கு எடப்பாடியார் பாடுபட்டு வருகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு இருக்கிறது, இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கு சாமானிய கட்சியாகவும், ஏழை எளிய மக்கள் கட்சியாகவும் உள்ளது. ஏனென்றால் இந்த 52 ஆண்டுகளில் அதிமுக ஆற்றிய சேவைகள் எண்ணில் அடங்காது.சமூக நீதியில் தொடங்கி ,69 சதவீத இட ஒதுக்கீடு 7.5 சகவீதஇட ஒதுக்கீடு,பெண் உரிமைகள் வரை என சொல்லிக் கொண்டே போகலாம்.
அ.இ.அதிமுக ஒரு நாளும் ,ஒரு பொழுதும் மக்கள் முகம் சுளிக்கின்ற வகையிலே, மக்கள் வெறுக்கின்ற வகையிலே எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. சமதர்மத்தை கடைப்பிடித்து ,சமுதாயத்தை மேன்மைப்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியார் தலைமையிலே வீர்கொண்டு வெற்றி நடை போட்டு, மகத்தான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நடுநடுங்கி போயிருப்பவர்கள், இன்றைக்கு அண்ணா திமுக கூட்டணியை ,எடுபிடிகளை வைத்து இன்றைக்கு அவர்கள் பல கருத்துக்களை இந்த களத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இன்றைக்கு ஆளும் திமுக மீது மக்கள் கடுமையான கோபம், வெறுப்பு ,கொந்தளிப்புடன் உள்ளனர் இதையெல்லாம் மடைமாற்றம், திசை திருப்பும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக நீதியரசர் ராஜமன்னார் தலைமையில், அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்து நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம், இப்போது மீண்டும் நீதியரசர் ஜோசப் தலைமையிலே குழு அமைத்து ஸ்டாலின் நடிப்பில், மாநில சுயாட்சி என்று மாபெரும் நாடகம் 50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவையில் அரங்கேற்றம் பண்ணப்பட்டுள்ளது திமுக அரசின் இந்த திடீர் ஞானயோதயம் என்ன காரணம் ? மக்கள் திமுகவை மீது கொண்டுள்ள கடும் கோபம் தான் காரணம்.
இன்றைக்கு சாகப் போற நேரத்தில் சங்கரா ,சங்கரா என்று என்பதைப் போல ஆட்சி அமைந்த போது மாநில சுயாட்சி பற்றி பேச துப்பில்லாத திமுக அரசு, இன்றைக்கு வீட்டுக்கு போகிற நிலையிலே இன்றைக்கு மக்களிடத்தில் ஏதோ சுயாட்சிக்கு இவர்தான் அவதாரம் எடுத்தது போல ஒரு நாடகத்தை அரங்கேற்று உள்ளார்கள். அதிகாரம் கையில் இருக்கிற பொழுது எல்லாம் அவர்கள் அதை பற்றி சிந்தித்து இல்லை. இப்போது அதிகாரம் பறிபோய் விடுமோ? என்கிற நிலையிலே மக்கள் அதிகாரத்தை பற்றி சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள் .
ஆகவே தான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவையின் 10 வது வார திண்ணைப் பிரச்சாரத்தில், கழக சொந்தங்களே உடனே புறப்படுங்கள் களத்திற்கு.
சட்டப்பேரவையில் திமுக நடத்திய நாடகத்தை அம்பலப்படுத்துகிற, புனித கடமை ஆற்றுவதற்கு கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களிலும் களத்தில் நேரடியாக சென்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறுவடிமாக உள்ள எடப்பாடியார் தலைமையிலே மீண்டும் அம்மாவின் புனித ஆட்சி மலர செய்திட, கழக அரசின் சாதனைகளை வீடு, வீடாக பட்டிதொட்டி எங்கும் வாக்காள பெருமக்களை நேரில் சந்தித்து, சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலே புதிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும்.
எடப்பாடியார் இந்த இயக்கத்தை கண் இமை போல கட்டி காத்து இதை மக்கள் இயக்கமாக, தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கியள்ளார். மக்கள் அ.இ.அதிமுக தலைமையான கூட்டணியை ஆதரித்து ஆட்சியில் அமர வைப்பதற்கு மூகூர்த்த நேரத்தை எதிர்பார்த்து உள்ளார்கள். இந்த புனிதப் பணியிலே புரட்சித்தலைவி அம்மா பேரவை பங்களிப்பு மகத்தானதாக இருக்க வேண்டும்
இன்றைக்கு எடுபுடிகளை வைத்து அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள், அவர்கள் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகின்ற வகையிலே, எட்டிப் பிடிக்கும் முடியாத ஏற்றுமிகு கூட்டணியை எடப்பாடியார் தலைமையில் அமைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், இன்றைக்கு திமுக கூட்டணியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இதை மடைமாற்றம் செய்கின்ற வகையில், இன்றைக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதனால் தமிழகத்தின் வாழ்வாதாரம், கலாச்சாரம் ,தமிழ் மொழி தமிழ் இனம் காக்கப்படும் என்று இதற்கு வீர வசனம் பேசி அதை நியாயப்படுத்துகிறார்கள், இந்த உண்மை மக்களுக்கு நன்றாக தெரியும், இனி மக்களிடத்தில் திமுக கதை அளக்க முடியாது, இனியும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளார்கள்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications