ஆமாங்க டிச. 5 பிரதோஷம்.. டெல்லிக்கு கூப்பிட்டாங்க.. அப்போ நன்னாள்தானே.. சமாளிக்கும் இபிஎஸ் தரப்பு
மதுரை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழியில் "நன்னாள்" என கூறியது தவறல்ல. அன்று பிரதோஷம். மேலும் எழுதி படிக்காமல் யதார்த்தமாக பேசியதை குற்றமாக கருத முடியாது என எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக வருகிற டிசம்பர் 9, 13, 14 ஆம் தேதி சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டிச.19ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம்
தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது, தமிழகத்தில் மக்கள் விரோத அரசு தற்போது ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட வேண்டிய நிலை உள்ளது. மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி மதுரையில் வருகிற 9, 13, 14ஆம் தேதிகளில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
9ஆம் தேதி போராட்டம்
இந்த நிலையில் வருகிற ஒன்பதாம் தேதி வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் போரட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலூர் நகராட்சியிலும், மதுரை மாநகர் பகுதி என சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறோம். ஓபிஎஸ் தொடர்ந்து நீதிமன்றத்தையே கையாண்டு வருகிறார் என்ற கேள்விக்கு மக்கள், கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ்ஸுடன் தொண்டர்கள் இல்லை
ஓபிஎஸ்ஸுடன் தொண்டர்களும் இல்லை, கட்சி நிர்வாகிகளும் இல்லை, கட்சியும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மூத்த வழக்கறிஞர் இவருக்காக வாதாட தயாராக இல்லை. ஆகையால் தான் இந்த வழக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். தோல்வி அடைவோம் என தெரிந்தும் எந்த வழக்கறிஞரும் வழக்கை வாதாட மாட்டார்கள். இதனால் தான் இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஓபிஎஸ் செல்லப்பட்டுள்ளார்.
நன்னாள்
ஜெயலலிதா நினைவு நாளின் போது எடுத்த உறுதிமொழியில் "நன்னாள்" என எடப்பாடி கூறியதற்கு ஓபிஎஸ் டங்கு ஸ்லிப் ஆயிருக்கும் என கூறியது குறித்த கேள்விக்கு, மற்ற தலைவர்கள் போல எடப்பாடி பழனிசாமி எழுதி வைப்பதை பார்த்து படிக்கும் பழக்கம் இல்லை மனதில் பட்டதை படமாக கூறுபவர். உறுதிமொழி பத்திரத்தில் சில பிழை இருப்பதால் அந்த மாறுதலான வார்த்தைகள் வந்துள்ளது. அவர் கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம் என்று ஐந்தாம் தேதி சிவனுக்கு உகந்த நாள் பிரதோஷம் என்பதால் நன்னாள் என கூறி இருக்கலாம், அல்லது அதிமுகவிற்கு சரியான தலைவர் எடப்பாடி பழனிசாமி என தேர்ந்தெடுத்து டெல்லிக்கு கூப்பிட்ட நன்னாள் எனவும் குறிப்பிடலாம். தவறான நோக்கத்தில் அதனை படிக்கவில்லை.
ஓபிஎஸ் தனி கட்சி தொடங்கட்டும்
இன்றைக்கு இதனை விட மிக தவறான வார்த்தைகள் எல்லாம் இன்றைய முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
பொதுக்குழுவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு. ஓபிஎஸ் கூட்டப் போவது கண்காட்சியாக இருக்குமே தவிர பொதுக்கூட்டம் அல்ல. அவரிடம் இருந்த ஒரே ஒரு பேச்சாளரும் திமுகவிடம் போய்விட்டார். அவர் ஓபிஎஸ் திமுகவினரிடையே இருந்த தொடர்பையும் உறுதிப்படுத்தி அதனை பயன்படுத்தி திமுகவிற்கு சென்றிருப்பார். டிடிவி தொடங்கியது போல் ஓபிஎஸ்ஸும் தனியாக கட்சி தொடங்கி விட்டுப் போயிட்டால் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை. எங்களிடம் தான் கட்சி இன்னமும் உள்ளது குடியரசு. தலைவரை அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் எனக் கூறினார்.