அதிகாரிகளை மிரட்டுவது திமுகவினருக்கு வாடிக்கை! மதுரை எய்ம்ஸை எடப்பாடி திறப்பார்-ராஜன் செல்லப்பா
மதுரை: அதிகாரிகளை மிரட்டுவது திமுகவினருக்கு வாடிக்கை என்றும் போகிற போக்கை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகிய பிறகு தான் மதுரை எய்ம்ஸ் திறப்பு விழா நடைபெறக் கூடும் என நினைப்பதாகவும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய வேண்டி 200 ஏக்கர் நிலத்தை எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியின் போது முறைப்படி ஒப்படைத்துவிட்டார் என்றும் ஆனாலும் பணிகள் தாமதமாக என்ன காரணம் எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக அரசுக்கு உண்மையிலேயே அக்கறையில்லை என்றும் இதை வைத்து மத்திய அரசு மீது பழியை போடலாம் என நினைக்கிறது எனவும் ராஜன் செல்லப்பா சாடினார்.

ராஜன் செல்லப்பா
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளுக்கு இன்று பூமி பூஜை போட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்துள்ளதாக கூறினார். இதுவரை மத்திய அரசுக்கு பல முறை கடிதங்கள் எழுதியுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து பதில் கடிதங்களும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் எடப்பாடி முதல்வர்
மற்ற விவகாரங்களுக்கு எல்லாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என்றார் ராஜன் செல்லப்பா. திமுக அரசு உள்நோக்கத்துடன் மதுரை எய்ம்ஸ் காலதாமதத்தை பார்ப்பதாகவும் இதன் மூலம் மத்திய அரசு மீது பழியை போட்டு வாக்குப்பெற்று விடலாம் என எண்ணுவதாகவும் கூறினார். இருக்கிற நிலையை பார்த்தால் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிய பிறகு தான் மதுரை எய்ம்ஸ் திறப்பு விழா நடைபெறும் என நினைப்பதாக தெரிவித்தார்.

காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா, மக்களுக்கு பயனளிக்காத திட்டங்களை தான் திமுக அரசு கொண்டு வருவதாக சாடினார். புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாக விளம்பளரம் செய்கிறார்களே தவிர இன்னும் அது நடைமுறைக்கு வந்தபாடில்லை என்றும் அப்ளிகேஷன் வாங்குவதிலேயே ஓராண்டை ஓட்டிவிட்டார்கள் எனவும் ராஜன் செல்லப்பா கிண்டல் அடித்தார்.

அரசு தோல்வி
தமிழகத்தில் தோல்வியடைந்த அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் முதியோர் உதவித் தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை திமுக அரசு குறைத்து வருவதாகவும் சாடினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுடன் திமுக அரசை ஒப்பிட்டுப் பார்த்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமையில்லை என ஒரே போடாக போட்டார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.












Click it and Unblock the Notifications