தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டு தமிழ்நாட்டு பிள்ளைகளை கைவிட்டார் ஸ்டாலின் - உதயகுமார் தாக்கு!
மதுரை : தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டி விட்டு தாய் தமிழ்நாட்டு பிள்ளைகளை கைவிட்டுவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுக ஆட்சியில் பால் விலை, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை,நேர்மையும் இல்லை, சத்தியமும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக. மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் உச்சபட்டியில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் நடமாடவும் வரி
அப்போது பேசிய அவர், "திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி உயர்வை கண்டித்து, மக்களோடு மக்களாக மழையில் நனைந்து கொண்டு அரசின் காதில் செல்லும் வகையில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டத்தை எடப்பாடியார் நடத்தினார். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் எடப்பாடியார் என்று மக்களே பேசிக் கொள்கின்றனர். இப்படியே திமுக அரசு சென்றால் மக்கள் நடமாடுவதற்கும் வரி விதித்து விடுவார்கள்.

பாரபட்சம்
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை புறக்கணித்து வருகின்றனர். ஏதாவது திட்டம் குறித்து கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இந்த திமுக ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை, சத்தியமும் இல்லை, நேர்மையும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக திட்டங்களை பாரபட்சம் இன்றி வழங்கினோம். குறிப்பாக 2011-2016 ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுக இல்லை. அப்போது கூட பாரபட்சம் பார்க்காமல் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினோம்.

எதையும் நிறைவேற்றவில்லை
ஆனால், தற்போது சட்டமன்றத்தில் மக்களின் குறைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் அமைச்சர்கள் உதயநிதியைப் பற்றி 20 நிமிடம், ஸ்டாலினை பற்றி 10 நிமிடம் என்று குடும்ப வாழ்த்துப்பா பாடுகின்றனர். ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்த மானிய கோரிக்கைகள், 110 விதிகள் கீழ் அறிக்கைகள், உறுதிமொழிகள், ஆளுநர் உரைகள் என அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ,தேர்தல் பிரச்சாரத்தில் முதியோர் உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று கூறினார். ஆனால் தமிழகம் முழுவதும் குறைத்து வருகின்றனர். கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்காக 1,200 கோடி தான் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 4,200 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 3000 கோடி அளவில் அதிகமாக இந்த திட்டத்துக்காக ஒதுக்கினோம்.

மன்னராட்சி
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்படி மன்னராட்சி தமிழகத்தில் மலர செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு உலக அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண தொண்டர் முதலமைச்சராக வர முடியும் என்ற வரலாற்றை படைத்த கட்சி அதிமுக. அதைப் படைத்தவர் எடப்பாடியார் ஆவார். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதலமைச்சராக முடியும் என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதுதான் உண்மையான ஜனநாயகம்.

கைவிட்டுவிட்டார்
தமிழகத்தை இருளில் மூழ்கடித்து தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டி விட்டு, தாய்த்தமிழ் நாட்டு பிள்ளைகளை கைவிட்டுவிட்டார் ஸ்டாலின். நாங்கள் ஜனநாயக ஆட்சி மலர பாடுபட்டு வருகிறோம். ஆனால் இன்றைக்கு மன்னராட்சி ஒழித்தும் கூட புறவழியில் மன்னராட்சியை திமுக அமைத்து வருகிறது. இதற்கா மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்?" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications