மதுரை சம்பவம்.. ‘ஈ’-யால் ரூ.10,000 அபராதம்! விசாரணை வளையத்தில் ஆவின் பால் நிறுவன உதவி மேலாளர்
மதுரை: ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக பால் பேக்கேஜிங் செய்த நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பாலில் 'ஈ' மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அருவறுப்பு ஏற்பட்டு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்து விளக்கமும் அளித்தது. கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் வாங்கி உபயோகப்படுத்தும் ஆவின் பாலில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாலில் ஈ
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் இன்று காலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி இருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்து அந்த பால் பாக்கெட்டை கத்திரிக்கும் சமயத்தில் அதில் ஈ ஒன்று மிதப்பதை அவர் பார்த்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஈ மிதந்த அந்த பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டு வாடிக்கையாளருக்கு புதிய பால் பாக்கெட் வழங்கப்பட்டது.

ஆவின் விளக்கம்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பேக்கிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும், இனி எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காது எனவும் ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அபராதம்
இந்த பால் பாக்கெட்டை திரும்பப் பெற்று இதுகுறித்து விசாரணையும் நடைபெறுவதாக ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆவின் உதவி மேலாளரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக பால் பேக்கேஜிங் செய்யும் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications