ஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி
மதுரை: ஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது என கேள்வி எழுப்பி மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் மத்திய கல்வி நிறுவனங்கள் (அனுமதிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006 மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019. மற்றும் ஐ.ஐ.டி களுக்கான இயக்குனரின் (23.04.2020) ஆணை ஆகியவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன்.

பதிவாளர்
ஐ.ஐ.டி களில் இளங்கலை/முதுகலைப்பட்டங்கள்/முனைவர் ஆய்வுப் பிரிவுகளில் மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத நியமனங்கள் ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றிய குழு ஒன்றை மேற்கண்ட ஆணை அமைத்தது. இக் குழுவிற்கு புது டெல்லி ஐ.ஐ.டி இயக்குனர் தலைவராகவும், சென்னை ஐ.ஐ.டியின் பதிவாளர் அமைப்பாளராகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பரிசீலனை
அக்குழுவிற்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டு தனது அறிக்கையை முடிவெடுப்பதற்கான உரிய மட்டத்தின் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் முன் வைக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் உருண்டோடி விட்டன. மேற் கண்ட குழு தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நோக்கம்
இந்த ஆய்வு தேவைப்பட்டதன் காரணம் ஒடுக்கப்பட்ட பிரிவினர்க்கான சமூக நீதியை வழங்குவதில் மத்திய கல்வி நிறுவனங்கள் தவறியதுதான். அதுவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த நிலை. ஆசிரியர், ஆசிரியரல்லாத நியமனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. ஆகவே அதற்கான 2019 சட்டமும் உறுதியாக அதன் நோக்கம் சிதையாமல் அமலாக்கப்பட வேண்டும்.

பிரச்சினை
சமூகத்தின் அடித்தள மக்களாய் விளங்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கான நீதி வழங்கப்படுவது அதிக முன்னுரிமை பெற வேண்டிய பிரச்சினை என்பதை நீங்களும் அறிவீர்கள். இது சம்பந்தமாக உங்களின் விரைவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன் என்று அந்த கடிதத்தில் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications