வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட சரத்குமார்! அப்போ 2 மணிக்கு எந்திரிச்சி கேட்கலியா?
மதுரை: சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்க தனது மனைவி ராதிகாவை நள்ளிரவு 2 மணிக்கு எழுப்பி கேட்டதாக சரத்குமார் தெரிவித்திருந்தது பொய் என்று அவர் வாயாலேயே இன்று உண்மை வந்துவிட்டது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். தற்போது அந்த கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் தன்னையும் நிர்வாகிகளையும் சரத்குமார் இணைத்துக் கொண்டார்.

அப்போது சரத்குமார் பேசிய ஒரு விஷயம் பொய் என்பது இப்போது ஊர்ஜிதமாகிவிட்டது. அது என்ன விஷயம் என பார்க்கலாம். கட்சி இணைப்பின் போது சரத்குமார் பேசுகையில் பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சி: பிரதமர் மோடி, காமராஜரை போல் ஆட்சி நடத்துகிறார் என பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில் நள்ளிரவு 2 மணி இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பிறகு அண்ணாமலைக்கு போனை போட்டு தகவல் சொன்னேன். இவ்வாறு சரத்குமார் தெரிவித்திருந்தார்.
இது அகில இந்திய சமத்துவ கட்சியில் இருந்த சில நிர்வாகிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தனை நாட்களாக கட்சிக்காக கடுமையாக உழைத்து பணத்தையும் செலவு செய்திருந்த நிலையில் தற்போது ஏதோ மனைவியிடம் நடுராத்திரி 2 மணிக்கு கேட்டுவிட்டு கட்சியை இணைத்தேன் என சரத்குமார் கூறியிருந்தது கட்சியினரின் உழைப்பை கொச்சைப்படுத்திவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆவேசமடைந்த சரத்குமார்: சரத்குமார் மனைவியை எழுப்பி கேட்டதாக கூறியதை சமூகவலைதளங்களில் பலர் கிண்டல் செய்தனர். அதற்கு கூட சரத்குமார், "மனைவிகிட்ட கேட்காமல் வேறு யாருகிட்ட கேட்பார்கள்" என ஆவேசமாக செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டார்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா பாஜக சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மதுரையில் திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். அப்போது சரத்குமார் கூறுகையில், விருதுநகர் பிரச்சினை மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகள் குறித்தும் ராதிகா கடந்த 30 நாளாக படித்து வைத்துள்ளார்.
அப்பழுக்கற்ற ஆட்சி: எனவே இந்த தொகுதியின் பிரச்சினை என்ன என்பதை ராதிகா நன்கு அறிந்திருக்கிறார். காமராஜர் பிறந்த மண்ணில் போட்டியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது 1954 முதல் 1963 வரை அப்பழுக்கற்ற ஆட்சியை காமராஜர் தந்தார். இன்று அதே ஆட்சியை பிரதமர் கொடுத்து வருகிறார். இவ்வாறு சரத்குமார் பேசியிருந்தார்.
30 நாளாகவா: அதாவது 30 நாளாக விருதுநகர் உள்பட தமிழக பிரச்சினைகளை மனைவி ராதிகா படித்திருக்கிறார் என சரத்குமார் சொல்வதை பார்த்தால் நள்ளிரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி எடுத்த முடிவில்லை என்றும் ஒரு மாதத்திற்கு முன்பே சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு அதற்கு "பிரதிபலனாக" ராதிகாவுக்கு ஒரு சீட்டையும் சரத்குமார் பெற்றிருப்பதாகவே தெரிகிறது. காரணம் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கடந்த மார்ச் 12 ஆம் தேதிதான். திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம் மார்ச் 24 இல் சரத்குமார் பேட்டி அளித்திருக்கிறார். அதாவது கட்சியை பாஜகவுடன் இணைத்து இன்னும் ஒரு மாதமே ஆகவில்லை. எனவே அவர் முன் கூட்டியே முடிவு செய்துவிட்டு சமகவை பாஜகவுடன் இணைத்ததாகவே புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது பேட்டியில் வாயை கொடுத்து சரத்குமார் மாட்டிக் கொண்டார்.












Click it and Unblock the Notifications