Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை: போலீசுக்கு ஆதரவாக சாட்சிக்கு வந்த டாக்டர் கடைசி நேரத்தில் எஸ்கேப்
மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க வந்த மருத்துவர் ஒருவர் கடைசி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகமல் மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். சாத்தான்குளம் பஜாரில் மகன் பென்னிக்ஸ் உடன் சேர்ந்து செல்போன் கடையை நடத்தி வந்தார் ஜெயராஜ். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தின்போது கடையை திறந்து வைத்து இருந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்து செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு
அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
தந்தை - மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டும் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு
தந்தை மகன் கொலை வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு அனுமதி வழங்கப்பட்டு, மருத்துவரை ஆஜர்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அந்த மருத்துவரும் நேற்று ஆஜராக வந்தார்.
ஆஜராகமல் தப்பி ஓடிய மருத்துவர்
ஆனால், நீதிமன்ற வளாகம் வந்த பிறகுதான், அந்த மருத்துவருக்கு சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு சாதகமாக சாட்சியம் அளிக்க அழைத்து வந்தது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆனார்.
மருத்துவர் ஆஜராகாததால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வாபஸ் பெற்றுக்கொண்டார். சாட்சியம் அளிக்க வந்த மருத்துவர் திடீரென ஆஜராகாமல் எஸ்கேப் ஆனது அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications