சாத்தான்குளம் தந்தை- மகன் உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் இந்த வழக்கும் அடக்கமாகியிருக்கும்! நீதிபதி
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்காமல் இருந்திருந்தால் அந்த இருவர் உடலை அடக்கம் செய்யும் முன்பே இந்த வழக்கும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: "இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கா என்பதை பார்க்க வேண்டும். தந்தை- மகன் இருவரும் நிராயுதபாணிகளாக இருந்த நிலையில் அவர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் துறை தாக்கியுள்ளது.

மக்களுக்கு உதவ வேண்டிய காவல் துறை இப்படி அடித்து கொன்றிருக்கிறார்கள். எனவே இதை அரிதிலும் அரிதான வழக்காகத்தான் பார்க்க வேண்டும். காவல் துறை லாக் அப்பில் வைத்து யாரையாவது துன்புறுத்தினால் அவர்களுக்கு எந்தவித தயவு தாட்சண்யம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.
அது போல் மத்திய அரசும் இந்த 9 பேருக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றுதான் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அது போல் மாநில அரசு பரிந்துரையில் ஏ1 ஸ்ரீதர் மீது இரு வழக்குகளும் ஏ3 ரகு கணேஷ் மீதும் வழக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது. தமிழக அரசும் இந்த 9 பேருக்கும் கருணையே காட்டக் கூடாது, உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், இந்த செயல் மனித கண்ணியத்தை மீறுவதாக இருக்கிறது. சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை நீதிமன்றம் சாதாரணமாக கடந்து விட முடியாது. இவர்களை திருத்துவதற்காக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது என இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
குற்றத்தின் அளவை பார்க்கும் போது இவர்கள் கொரோனா காலத்தில் கடையை திறந்தார்கள் என்பதற்காக கொடூரமாக தாக்கியுள்ளார்கள். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்காவிட்டால் இந்த உடலை அடக்கம் செய்யும் முன்பே இந்த வழக்கும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போல் மொத்தமாக ரூ 1.04 கோடி நிவாரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications