Sathankulam: அடித்து பழக அப்பா, மகன் கிடைச்சிருக்காங்க! ஜெயராஜ், பென்னிக்சை கொடூரமாக தாக்கிய போலீஸ்.. நீதிபதி
மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நீதிபதி கூறினார். ஜெயராஜ், பென்னிக்சை அடித்த போது, நாம் அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளதாக போலீசார் பேசியுள்ளனர் என நீதிபதி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணைக்கு பின் இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்குதல்
முன்னதாக, தீர்ப்பை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான பிரேத பரிசோதனையை அறிக்கையை வாசித்தார். நீதிபதி வாசித்த அறிக்கையின் விவரம் வருமாறு:- உடல் நலக்குறைவு காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை.
ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதாலேயே ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியுள்ளனர். கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வருகிறது. டேபிளில் படுக்க வைத்தும் ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியுள்ளனர்.
அடித்து பழக அப்பா, மகன் கிடைத்து இருக்கிறார்கள்
ஜெயராஜ், பென்னிக்சை அடித்த போது, நாம் அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளதாக போலீசார் பேசியுள்ளனர். தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு என்பது விசாரணையில் தெரியவந்தது.
காயம் அடைந்த தந்தை, மகன் அணிந்து இருந்த ஆடைகள் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட போலீசார் கூறியுள்ளனர். வழக்கில் அனைத்து தடயங்களையும் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் அழித்துள்ளனர்." என்று நீதிபதி கூறினார்.
கடையை திறந்து வைத்து இருந்ததாக
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், கடையை திறந்து வைத்து இருந்ததாக போலீஸ் விசாரணைக்காக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
நாட்டை உலுக்கிய இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பலமுறை இவர்கள் ஜாமீன் கேட்டும், ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
குறுக்கு விசாரணையை, தொடர்ந்து கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் அடித்தே தந்தை மகனை கொலை செய்துள்ளனர் என்றும் நீதிபதி கூறினார். பொய் வழக்கு போட்டே தந்தை மகன் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து அடித்து கொன்றிருக்கிறார்கள் என்றும் நீதிபதி கூறினார். தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications