சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் நடக்கக் கூடாது.. மனிதனை மனிதனே அடிக்கக் கூடாது.. நீதிபதிகள்
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் நடக்கக் கூடாது. மனிதனை மனிதனே அடிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்திவ வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸ் கொலை வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அது போல் இன்று அதிகாலை நெல்லை, விளாத்திக்குளத்தில் பதுங்கியிருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பெண் காவலர்
இதையடுத்து சினிமா பாணியில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை துரத்தி சென்று பிடித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றனர்.

போலீஸார்
இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீஸார் விளக்கமளித்தனர். இதையடுத்து நீதிபதிகள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சிபிசிஐடி
கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி நடவடிக்கை அமைந்துள்ளது.

உறுதி
சாத்தான்குளம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக் கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணி நேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல் துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications