“என்ன சத்தம் வரல.. ஏன் அடிக்காம இருக்கீங்க?” - சாத்தான்குளம்.. ‘பகீர்’ சாட்சியம் அளித்த பெண் காவலர்!
மதுரை : ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசாரும் மீண்டும் மீண்டும் தாக்கினார்கள் என பெண் தலைமை காவலர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
போலீசார் ஜெயராஜை கொடூரமாக தாக்கியபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர் இருக்கிறது, அடிப்பதை நிறுத்துங்கள் எனக் கெஞ்சியதாகவும் தனது வாக்குமூலத்தில் பெண் தலைமை காவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில், போலீசார் தொடர்ச்சியாக கொடூரமாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கிறிஸ்தவர்கள்.. மாணவி இந்து! ஸ்டாலினை மத அடிப்படையில் விமர்சித்த எச்.ராஜா
சாத்தான்குளம் லாக்கப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கொரோனா ஊரடங்கின்போது கடையை அடைப்பது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணை
இதனையடுத்து தந்தை - மகன் இருவரும் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தலைமைக் காவலர் சாட்சியம்
இந்த வழக்கு விசாரணை நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர். வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியபோது, தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
10 போலீசாரும் சேர்ந்து
அப்போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த 10 போலீசாரும் சேர்ந்து, தொடர்ச்சியாக தாக்கி, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தி உயிர்போகும் அளவிற்கு அடித்து வெளுத்ததாக தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்துள்ளார்.
கெஞ்சிய ஜெயராஜ் பென்னிக்ஸ்
போலீசார் தந்தை ஜெயராஜை கடுமையாக தாக்கியபோது அவர் தனக்கு சர்க்கரை வியாதியும், ரத்த அழுத்தமும் இருக்கிறது என்றும் இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்றும், வலி தாங்க முடியவில்லை என்று கூறியதாகவும், பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் பியூலா செல்வக்குமாரி தெரிவித்துள்ளார்.
என்ன சத்தம் வரல
அப்போது போலீசார் அடிப்பதை நிறுத்தியுள்ளனர். கீழ் ஃப்ளோரில் இருந்து போலீசார் தொடர்ந்து அடிக்கிறார்களா எனக் கவனித்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தொடர்ந்து போலீசாரை திட்டி ஏன் அடிக்காம இருக்கீங்க, சத்தமே கேக்கல எனக் கூறி மீண்டும் மீண்டும் அடிக்க சொன்னதாகவும் அதனால், போலீசாரும் விடாமல் தாக்கியதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
பென்னிக்ஸ் உள்ளாடையை வைத்தே
பின்னர் தான் பணி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், மறுநாள் காவல் நிலையத்திற்கு உள்ளே வந்த போது ரத்த வாடை வீசியது என்றும் ரத்தக்கறைகளை பென்னிக்ஸ் உள்ளாடைகளை வைத்து, அவரையே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் துடைக்க வைத்தார் என்றும் கேள்விப்பட்டதாக தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரி தெரிவித்துள்ளார்.
ஐந்தரை மணி நேரம்
பகல் 12 மணிக்கு சாட்சியம் அளிக்கத் தொடங்கிய பியூலா செல்வக்குமாரி மாலை 5.30 வரை சாட்சியம் அளித்துள்ளார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும், போலீசார் சாட்சியம் அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.